பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 17



“எந்தப் பொருளுக்கும் அழிவு உண்டு. எவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது.

பிரச்சனைகளைக் கண்டு பயந்தால், அந்தப் பிரச்சனைகள் நம் தோளின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏவல் கொள்ளும்! நாம் அந்தப் பிரச்சனைகளைப் பிடித்து அமுக்கி நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பிரச்சனைகள் தீரும்; வாழ்க்கையும் இயங்கும். இத்தகைய வாழ்க்கைப் பிரச்சனையைச் சந்திக்கத் தெரியாத ஒருவனின் அவலம் பற்றி, தொ. மு. சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவல் விவரிக்கிறது.

“வாழ்க்கைப் பிரச்சனைகள் தன்னை நாலாபுறத்திலும் சூழ்ந்துகொண்டு பயமுறுத்துவதுபோல், அவனுக்குத் தோன்றியது. அடிவானத்தில் மின்னிய மின்னலைப் பார்க்கக் கூசும் கண்களைப் போல் அந்த பிரச்சனைகளை ஏறிட்டுப் பார்க்கவே அவன் மனம் கூசியது. ஏறிட்டுப் பார்க்காவிட்டாலோ பாரம் தாங்க முடியாத இருள் மண்டலம் தன்மீது விழுந்து தன்னை அமுக்குவது போல் அவனுக்குத் தோன்றியது” என்று விவரிக்கிறது.

(பஞ்சும் பசியும் பக். 195)

ஏன் இந்த அவலம்? பிரச்சனைகள் நம்மைவிட ஆற்றல் வாய்ந்தவை அல்ல! பிரச்சனைகளை சந்திக்கத் தயாராகுங்கள்!

பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் நின்று, நீந்திக் கரையேறி, வெற்றி வாகை சூடவேண்டும். இப்படிக் கரையேறினால்தான் “மானிடப் பிறவி