பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சங்கத்திற்கு மடாதிபதிகள் பொருளுதவி செய்யலாகாதா?” என்று கேட்கிறான் பாரதி.

மேலும் “அன்னதானம் சுவர்ணதானத்தில் செலவேயல்லாது வரவு இல்லை. தொழில்களில், வர்த்தகத்தில் முதலீடு செய்தால் வரவும் உண்டு. தரித்திரமும் ஜனங்களை விட்டு நீங்கும்.

கொடிய வறுமை நீங்கின பொழுதே ஜனங்கள் ஆத்ம ஞானத்தில் நாட்டம் கொள்வார்கள். இந்தப் புண்ணியத்தை அந்த மடாதிபதியான ஞான சிரேஷ்டர் கட்டிக் கொள்வாரோ?” என்று பாரதி அன்று கேட்டான். இது நடைபெற வேண்டும்.

பாரதி, தமிழ் ஆர்வலன். பாரதி, ஆங்கிலக் கல்வியை எதிர்த்தவன். தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தவன். பாரதி, “சக்திதாசன்” என்ற புனைப் பெயரில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சொன்னதாகச் சில செய்திகளை தொகுத்துத் தந்துள்ளான்.

அவற்றுள் முதன்மையானது, தமிழ் நாட்டார் எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். கற்கும் கலைகள் எல்லாம் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும்” என்பதாகும்.

பாரதி, தாம் எழுதிய ‘பாஞ்சாலி சபத’த்தைத் தமது எழுத்துக்கள் மூலமே அறிமுகப்படுத்துகிறான்.

பாரதி, “பொன் வால் நரி” என்றொரு கட்டுக்கதையை ஆங்கிலத்தில் எழுதினான். இதற்கு நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், இந்தப் பாராட்டில் பாரதி மகிழவில்லை. ஏன்?