பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எனினும் நான் மீட்டும் மீட்டும் ஜன்மமெடுத்து ஆயிரக்கணக்கான துன்பங்களில் உழன்றேனும் என் ஒரே கடவுள், ஒரே உண்மைக் கடவுள், நான் நம்புகிற தனித் தெய்வம் - அதாவது எல்லா ஜீவர்களின் தொகுதி, என் கடவுளாகிய தீயோர், என் கடவுளாகிய எல்லாச் சாதிகளிலும், எல்லா இனங்களிலும் என் கடவுளாகிய ஏழைகள் - இக் கடவுளை நான் தொழுதற்குரிய பறு பெறுவேனாக!”

இவர்களே என் இஷ்ட தெய்வம்! ஆ! மூடர்களே! உயிருடைய கடவுளையும் உலகம் எங்கும் நிரம்பிக் கிடக்கும் அவனுடைய பிரதி பிம்பங்களையும் புறக்கணித்து விட்டு கற்பனையாகிய நிழல்களைத் தேடி, ஓடி ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் நடத்துவதென்ன! கண்ணுக்குப் புலப்படும் கடவுளைத் தொழுங்கள்! மற்ற சிலைகளையெல்லாம் உடைத்தெறிந்து விடுங்கள்!” - இது விவேகானந்தரின் கடித வாசகம்.

இந்த கருத்தை அப்படியே பாரதி ஏற்று கொண்டான்! விவேகானந்தர் கண்டு, பாரதி வழி மொழிந்த இந்த உயிர்க்குல வழிபாட்டில் நமது நாட்டின் வளர்ச்சி என்று வந்து பொருந்தும்?

பாரதி - பிரகலாதன் வரலாற்றை கருவியாகக் கொண்டு நம்மனோரிடம் நம்பிக்கையை வளர்க்க முற்படுகிறான். ஒருவர் ஒரு பணியில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்கேற்ற அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பாரதி, பக்தியையும் நம்பிக்கையையும் நோன்பு” என்ற பொருளிலேயே காண்கிறான்.

பாரதி, ஞானிகளைப் போற்றுகிறான். நாட்டின் நலங் காக்க ஞானிகள் தேவை என்பதையும் உணர்கிறான்.