பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சமுத்திரக் கதைகள்


என்னமோ... உடம்பில் மொய்த்த கொசுக்களை வாலால் அடித்துத் துரத்தவில்லை. எறும்பு மொய்த்த வி லாவை இம்மிகூட நகர்த்தவில்லை. வாழ்வு-சாவு எல்லைக்கோடுகள் அழிந்து போன மரணப் பரப்பில் முடங்கியது.

திடீரென்று ஊனை உருக்கும் சத்தம்... லொள்... லொள்... ஒன்றே பலவாய்.. பலவே ஒன்றாய் ஒலித்த ஆங்கார ஒலித் திரள்...

அந்தக் காட்டுக்கன்று மிரளாமலே தலை புரட்டிப் பார்த்தது. அப்படிப் பார்க்கப் பார்க்க தலையே துண்டிக்கப் பட்டது போன்ற ‘முண்டத்தனம்’... சிறிது தொலைவில் கட்டிழந்து ஓடிய காட்டாற்றின் அருகே, பெருத்த உடம்பும் சிறுத்த இலைகளும் கொண்ட வாகைமரத்தின் அடிவாரத்தில், அதன் அம்மாவின் தலையை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. அதன் எஞ்சிய உடம்பு ரத்தம் விரவப்பட்ட சதைக்கூழாய் தெரிந்தது. பதினைந்து, இருபது காட்டு நாய்கள்.அம்மாவின் இடுப்பளவு உயரம் கூட இல்லா அற்ப ஜீவிகள்.அவளை சதைசதையாய் எலும்பு எலும்பாய் தின்று கொண்டிருக்கினறன. அங்கே ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்க வேண்டும். இரண்டு நாய்கள் கிழே விழுந்து குடல் சுரியக் கிடக்கின்றன. கழுகுகளும், நாரைகளும், எச்சில் மாமிசத்திற்காக பயபக்தியோடு காத்து நிற்கின்றன.

அந்தக் கன்றுக்குட்டியால் தாளமுடியவில்லை. புருவ மத்தியில் குங்குமம் வைத்தது போன்ற வட்டப் பொட்டும், பச்சை குத்தியது போல் பிடரிப் பசுமையும், மரகதக் கல் மாதிரியான மோவாயும் கொண்ட அம்மாவைப் பார்க்கப் பார்க்க அதன் பார்வை நீரில் மிதந்தது. காட்டுப் புலிகள் வரும்போதுகூட, இதர மாட்டுக் கூட்டத்தோடு நின்று, தன்னையும் வயிற்றுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டு, அந்தப் புலிப் பகைக்கு எதிர்ப்பகையாய் கொம்பு சாய்த்து சவாலிட்ட தாய், இப்போது குப்புறக் கிடக்கிறாள். என்ன செய்யலாம் இந்த ரவுடிகளை?

அந்தக் கன்று நாய்க் கூட்டத்தை முட்டப் போவது போல் போகப் பார்த்தது. முடியவில்லை. பிஞ்சுக் கொம்புகளால் தரையைத் துழாவியது. கிழே போன தலையை மேலே நிமிர்த்த முடியாத