பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சமுத்திரக் கதைகள்


‘ஸ்ரீராமனுக்குக் சிதை, நளனுக்குத் தமயந்தி, சிவனுக்கு சக்தி, இந்த மானுட ஆண்டவனுக்கு, இந்த அகிலாம்மா.”

உடல் நேர்த்தியாலும்,' புது' நிறத்தாலும், உயரத்தாலும், அகலத்தாலும் ஒன்றுபட்டுத் தோன்றும், அந்த ஜோடியை, ஒரு தந்தைக்குரிய நிலையில், கண்களால் அள்ளிப் பருகிய சாஸ்திரி, அப்படிப் பருகியதை, வாய் வழியாய் அன்புப் பிரவாகமாய் வெளிப்படுத்தினார்.

“நான் உங்களுக்கு எப்பவும் சொல்றதை, இப்பவும் சொல்றேன். நீங்க தீர்க்காயுசா இருப்பேள். ரத்தக் கொதிப்போ... நீரழிவோ... இஸ்கிமாவோ... அல்சரோ... உங்களை ஒன்றும் செய்யாது. எல்லாம் நம்ம பிள்ளையார் பார்த்துக்குவார். சரி... ஜாதகங்களை எடுத்துட்டு வாரேளா?...”

“ஒரு சிறு விண்ணப்பம் சாமி. பிள்ளையார் பார்த்துக்குவார்தான். அப்படி அவர் பார்த்துக்கிறதுக்கு, நாமும் தகுதியாய் இருக்கணுமே. இவருக்கு கேழ்வரகு கஞ்சி காய்ச்சி,, நல்லா ஆறிட்டுது. ஒரு மூணு கிளாஸ் போட்டுட்டு வந்துட்டார்னா... அப்புறம் ஆற அமரப் பார்க்கலாம். தயவுசெய்து, கொஞ்சம் நேரம். நீரழிவு நோய்க்கு நாம ஒத்துழைப்பு கொடுத்தால்தான், அது நமக்கு ஒத்துழைப்பு கொடுக்குமுன்னு, டாக்டர் சொல்றார்.”

ராமநாத சாஸ்திரிக்கு, கோபமான கோபம். அந்தம்மா, பிள்ளையாரை விட, டாக்டரை உசத்தியாய் நினைக்கிற கோபம். தன் வீட்டிலும் காத்திருக்கும் கேப்பைக்கூழ், இந்நேரம் கட்டியாகி இருக்குமே என்ற பசிக்கோபம். விசுவாமித்திரர்போல் கட்டாகவும், துர்வாசர்போல் ரைட்டாகவும் பேசப்போனார். அதற்குள், அந்தம்மா ஒடிப்போய், கணவருக்கு கேழ்வரகுக் கஞ்சி கொண்டு வந்த கையோடு, இன்னொரு கையில் ஒரு தட்டு நிறைய நாகப்பழங்களைக் கொண்டுவந்து, சாமியின் வயிற்றுக்கு எதிர்ப்பக்கம் வைத்தபடியே, 'சாப்பிடுங்க சாமி... பசியும் அடங்கும். நீரழிவுக்கும் நல்லது.' என்று ஆகார ஆற்றுப்படுத்தல் செய்தாள்.