பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்முகக் க/வி/தை

பேராசிரியர் ச. ராஜநாயகம்
லொயோலா கல்லூரி, சென்னை.

01.

திருவாங்கூர் சமஸ்தானத்து முகவரியில்லாக் குக்கிராமக் குடிசைமண்டி ஒன்றில் தொடங்கி, முகவரி தேவையில்லாத நம் பக்கத்துத் தெரு வரை பதிமூன்று கதை - அலைகளை வீசும் இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ளது சமுத்திரக் கதைகள் எனும் தொகுப்பு. இன்றில் நிலைகொண்டு, நேற்றில் அழுந்தி மீண்டு, நாளையை நோக்கிப் பாயக் காத்திருக்கும் அம்புகளாய்க் கதைகள். முதுகில் பாயாதவை - நெஞ்சில் பாய்கின்றன / பாய்ச்சுகின்றன - ஈரமும் வீரமும். எனவே இத் தொகுப்பை ஒரு கவிதை எனலாம் - கதை. கவிதை விதை, சில இடங்களில் கதை கவிதையாகிறது; சில இடங்களில் கவிதை கதையாகிறது. ஆனால் எல்லாக் கதைகளும் விளிம்புநிலைகளில் மையம் கொண்டுள்ள விதைகள்.

02.

முகம் தெரியாத மனுஷி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் மீட்சிக்கான போராட்டத்தில் முகமிழந்த பெண் போராளிகளின் முகங்களை மீளுருவாக்கும் முயற்சி - ராசம்மா வடிவில். ராசம்மா ஒரு கலகக்காரரல்ல. தன்னுடைய உடம்பை முடிக்கொள்ளும் உரிமையுள்ள, மனுவழியாக வாழத் துடிக்கும், தன்மானமிக்க ஒரு சாதாரணப் பெண். ஆனால் அதுவே ஒரு கலகத்துக்கான காரணமாக அமைந்திருந்தது. நவீனத் தமிழகத்தில் பெண்ணுரிமைக்கான முதல் குரல் ராசம்மாவைப் போன்ற முகம் தெரியாத ஒடுக்கப்பட்ட நம் அன்னையரின் குரல். அதுவும்கூட ஒரு கட்டத்தில் வெறும் கூக்குரலாய், அவலமாய், ஓலமாய் இருந்ததுதான். ஆனால் கூக்குரல் கூட்டுக்குரலாய் ஆகும்போது, சில-பல உடல்கள் விழ நேர்ந்தாலும்