4
ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி
இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும், அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், ‘முத்துக்குட்டி’ ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார்.
சிறையும்—எதிர்வினையும்
அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, “வைகுண்ட சாமியானார்”.
சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்