க. சமுத்திரம் 1 61
சென்னை நகர சாளரங்கள் வழியாக கிராமங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியாது.
இந்த உலகம்மையை தமிழில் வந்த தனி ரக நாவல் என்று வல்லிக்கண்ணன் வர்ணித்தார்.
‘உலகம்மை தமிழில் பின்னால் தோன்றும் நாவல்களில் எதிரொலிசெய்வாள்’ என்று ஈழத்துத் தமிழறிஞர் டாக்டர் கைலாசபதி கருத்துத் தெரிவித்தார்.
சென்னை வானொலியில் நாடகமாக்கப்பட்டு, இருமுறை ஒலி பரப்பாகியது. பிறகு அகில பாரத நாடக நிகழ்ச்சியில், 14 மொழிகளில், 87 நிலையங்கள் மூலமாக, ஒரே சமயத்தில் குரல் கொடுத்தாள் உலகம்மை.
உலகம்மை படைப்பின்போது.
உலகம்மையைப் படைக்கும் போது அழுதிருக்கிறேன். முஷ்டிகளால் மேஜையைக் குத்தியிருக்கிறேன். அவள் தந்தை இறந்தபோது என் தந்தை இறந்ததுபோல், ஏங்கி அழுதேன். ஏனென்றால், உலகம்மையில் என் சாயலைக் கண்டேன். ஏழைப் பெண்களின் அவல நிலையின் அடையாளத்தைப் பார்த்தேன். உலகம்மை சேரிக்குப் போன பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை இரண்டாவது பாகமாக எழுதும்படி நண்பர்கள் சொல்கிறார்கள். அதே சமயம், இனிமேல் அப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். எனக்கும் பயமாக இருக்கிறது.
எப்படியோ கச்சிதமாக அமைந்த உலகம்மையை, பலவீனப்படுத்த நான் விரும்பவில்லை. நாவல் எழுதுவதற்கு முன்பு, இவளை சென்னைக்குக் கொண்டு வந்து, சீரழிய வைக்க நினைத்தேன். ஆனால் அவளோ ஒரு கட்டத்திற்கு வந்ததும், ‘இப்படித்தான் எழுதணும் என்று ஆணையிட்டு விட்டாள்.
நீங்கள் சொன்னால் நம்புவீர்களோ என்னமோ, இந்த உலகம்மையையே, சிக்கல் வரும்போதும், இலக்கிய வெற்றிக்கும், நான் மானசீகமாக இப்போது வணங்கி வருகிறேன். என்னால் படைக்கப்பட்டவள், இப்போது என்னைப் படைத்துக் கொண்டு இருக்கிறாள்!
பின்குறிப்பு:
அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பியை நான் சந்தித்தபோது இந்த நாவலில் எதிர்கால தலித்திய போராட்டத்திற்கான விதை உள்ளடங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
மங்கை - 1980.
4 - 12.