சு. சமுத்திரம்
17
விழாவின் இறுதிநாளில், விழாக்குழுவின் அலுவலகத்தில் தனது வசதியான நாற்காலியில் எம்.டி.வி. உட்கார்ந்திருக்கிறார் பக்கவாட்டிலுள்ள ஒரு சின்ன நாற்காலியில் அமர்ந்தபடி கதராடை அணிந்த ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிது தொலைவில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்பே வந்துவிட்ட அந்தப் பெரியவரை, ‘இவர்தான் கேரள மாநில கலாச்சார மற்றும் மீன்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன்’ என்று வாசுதேவநாயர் எங்களுக்கு அறிமுகம் செய்கிறார். நாங்கள் வியந்து போகிறோம்.
கலைஞருக்கு ஒரு பரிந்துரை....
தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், மாற்றாராலும் கலைஞர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது பெயருக்குப் பதிலாக அவரது பட்டமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்... நிற்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர், எழுத்தச்சனுக்கு இருப்பது போன்ற, ஒரு தமிழ் வளாகத்தை நகர்ப்புறப்பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். இதில் திருவள்ளுவரையோ தமிழ்த்தாயையோ அல்லது தொல்காப்பியரையோ அல்லது மூவரையுமோ முன்னிலைப் படுத்த வேண்டும். எழுத்தச்சனின் எழுத்தாணியை, மக்களிடம் கொண்டு செல்வதுபோல் இவர்களை உருவகப்படுத்தி ஏடுகளோடு ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் இலக்கிய விழா நடத்தி, அனைத்து தரப்பு தமிழர்களையும் திரட்ட வேண்டும். சாதி சமயங்களால் பிரிந்தும், இப்போது குட்டையைக் குழப்பும் மதவாத சக்திகளால் மிரண்டும் போயிருக்கும் தமிழர்களை, நம் முன்னோரின் பெயரால் ஒருமுனைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, இதற்காக படைப்பாளிகள், தமிழறிஞர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பலாம். எழுத்தச்சன் இலக்கிய வளாகத்திலுள்ள நவீனமான கட்டிடங்கள் கண்ணை மயக்குபவை. கருத்திற்கு நங்கூரம் பாய்ச்சுபவை. என்னைக் கேட்டால் எளிமையும், இனிமையும் கூடவே கம்பீரமும் கலந்த அந்தக் கட்டிடங்களை தமிழகத்தில் நகலெடுக்கலாம்.