உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

81

கோழிப்பண்ணையில் வேலைப் பார்ப்பவர்களை, வீடுகட்ட அனுப்புவதாகக் கூறிவிட்டார். இதற்கிடையே ‘வீட்டுப் பிளான்’ புதுப்பிக்கப்பட்டது. மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் உதவியாலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் கண்ணியமானவர்களாய் இருந்ததாலும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி உதவியாலும் சிமெண்ட் பெர்மிட்டும் தயாராகிவிட்டது.

ஒரு நல்ல நாளில் -

பூசை முடிந்து, நிலத்தில் செவ்வகக் கோடு வரையப்பட்ட பகுதிகளில், வேலையாட்கள் கம்பியோடும் மண்வெட்டியோடும் இறங்கினார்கள். இந்தச் சமயத்தில், கல்வெட்டுத் துறை நிபுணரும், இஞ்சினீயருமான நண்பர் கொடுமுடி சண்முகம் வந்தார். இவர்தான் எனக்கு இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தவர்.

“இங்கே என்ன பண்றீங்க...?”

“வாங்க ஸார்... வாங்க... வீடு கட்டப் போறோம்...!”

“மகிழ்ச்சி... ஆனால், உங்க நிலத்துலதானே வீடு கட்டணும்?”

“அப்போ!...”

“ஒங்க நிலம் அங்கே... அதோ!”

நான், என் மனைவியின் கண்களுக்குத் தப்பித்துக் கொண்டிருந்தேன். அவர் பிறந்தகம் போயிருந்தபோது, சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக வாங்கிப்போட்ட இடம். சென்னை திரும்பியதும், இந்த இடத்தைக் காட்டி, மனைவியிடம் சபாஷ் பட்டம் வாங்கினேன். ஆனால், இப்போதோ என் மனைவி என்னிடம் பேசவில்லை. அப்பாவை அழைத்தார்.

“வாங்கப்பா... வீட்டுக்குப் போகலாம்... அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்குப் பதிலாய் பெஸண்ட் நகர்லே ஒரு குடிசை போட்டுக்கலாம்.... நிலம் வாங்கத் வாங்கத் தெரிஞ்சா வாங்கணும்... வாங்கப்பா....”

வம்புச் சுவரும் — வராத சுவரும்

என் மாமனார் பொறுமைசாலி. உருப்படாத தன் மாப்பிள்ளை, எந்த நிலமோ ஒன்றை வாங்கிப் போட்டாரே என்ற சந்தோஷக்காரர். மகளைச் சமாதானப்படுத்திவிட்டார். அப்புறம் நான் வாங்கிப்போட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தில் மீண்டும், பிளான்படி சுண்ணாம்புக் கோடுகள் போடப் போகிற சமயத்தில், என் மாமனார் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பினார்.