பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடலிலோ உருண்டு மாண்டொழிந்து போகுமோ, அன்றே இந்திய நாட்டின் விடுதலைநாள்! இவ்வளவு திட்ட வட்டமாக இந்தக் கொடுஞ் சாதியின் பெருமைகளை அறிந்திருந்தும், புத்தர் முதல் இன்று பிறந்துள்ள குழந்தைவரை எல்லாரும் சாதியை ஒழித்துக் கட்டவே (!) முனைந்து வருகின்றோம். இருந்தாலும் அதன் சல்லி வேரின் நுனியைக் கூடக் கிள்ள முடியவில்லை. அந்தத் துணிவில்தான் நாமும் ஏதாவது (எதுவும் நடைபெறாது என்று தெரியும்) சொல்லி வைப்போம் என்று சில கூற முன்வந்தோம்.

சாதியைச் சாகவிடாது காக்கும் பணியில் அவ்வப்பொழுது அரசர்களும், சமய வெறியர் சிலரும், சாதி வெறியர் பலரும், மருந்து அடிக்க அடிக்கப் படை படையாய்ப் பல்கிப் பெருகும் கொசுக்கூட்டம் போல் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் ஓரே இனத்தில் தோன்றாமல் எத்தனை எத்தனைச் சாதிகள் உள்ளனவோ அத்தனைச் சாதிகளிலும் வேற்றுமை பாராது அவ்வப்பொழுது தோன்றி, அவரவர் சாதியாரைத் தேற்றியும் தம் தம் சாதிப் பழக்க வழக்கங்களை மறந்து போகாமல் அறிவுறுத்தியும் அத்தகைய செயல்களுக்காகப் பலவகையான செல்வங்களைத் திரட்டியும் காத்தும் வந்திருக்கின்றனர். வருகின்றனர். ஆனால் காலத்திற்குத் தகுந்தாற்போல் அச் சாதிக் குரவர்கள் மாறுபாடான தோற்றங்களுடன் பிறந்து தம் தம் திருப்பணிகளைப் புரிந்து வருகின்றனரேயன்றி, அவர்தம் உள்ளம், அறிவு, உணர்வு எல்லாம் அன்றிருந்த போலவே இன்றும் உள்ளன. அக்காலத்திய சாதிக் குரவர் குடுமி வைத்துக் கொண்டிருக்கலாம்; கையில் ஓலைச் சுவடியும் எழுத்தாணியும் பிடித்துக் கொண்டிருக்கலாம். அவரே இக்காலத்தில் ஒழுகை (கிராப்) வைத்துக்கொண்டும் தாளும் தூவலும் பிடித்துக் கொண்டுமிருக்கலாம். ஆனால் இருவர் உள்ளங்களும் ஒரே வகையான மலக்குழிகள்தாம். இத்தகைய சாதிக் கிறுக்கர்கள் இக் கால் ஊர்கள்தொறும் தெருக்கள்தொறும் தோன்றித் தம் பிறவித் தொண்டைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தம் பெருக்கத்தையும் நம் புனித (!) சாதி சமய வேறுபாடற்ற பாரத அரசினர் தம்முடைய ஆட்சி நாடகத்தில் நடிக்கவேண்டிய ஒரு காட்சிக்காக அணியப்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர்; இவை ஒருபுறம் கிடக்க.

சாதியென்னும், இவ்விந்திய மக்கள் கூட்டத்தை விடாமல் அமுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தீராத தொழு நோய் தொடக்கத்தில் யாரால் எவ்விடத்தில் இறக்குமதி செய்யப் பெற்றது அல்லது தோற்றுவிக்கப் பெற்றது என்று ஆயும் தருக்க முனைப்பு நமக்கு இப்பொழுது வேண்டா. ஆனால் ஒன்றை மட்டும் எண்ணியே ஆகல் வேண்டும். தந்நலமும், சோம்பேறித்தனமும், மக்களை அடக்கி அடிமைப்படுத்தும் கொடிய எண்ணமும் வாய்ந்த சமய வெறியர்கள் ஒரு சிலரால்தான் இது வித்திடப்

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/34&oldid=1164344" இலிருந்து மீள்விக்கப்பட்டது