பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 
குல சமயங்கள்!
 

தம்பி! சென்ற இரண்டு இதழ்களிலும் எதிர்காலத்தைப் பற்றியும், அந்த எதிர்காலத்தைச் சிறந்ததாகவும் இன்பமானதாகவும் உருவாக்க வேண்டுமானால் நீ நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் ஒருவாறு தெளிவாகச் சொன்னேன். இந்த இதழில் நாம் தவிர்க்க வேண்டிய சில பூசல்களைப் பற்றிக் கூறுவேன்.

தம்பி! மாந்தர்களாகிய நாம் விலங்குகள், பறவைகள், பிற சிற்றுயிர்கள் போல் அன்றி, உயர்ந்த அறிவுணர்வும் எண்ணுதிறனும் செயல் திறனும் வாய்ந்தவர்கள் இல்லையா? எனவே நாம் எல்லாரும் ஒரே இனம், ஒரே வாழ்க்கை உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தவறில்லை அன்றோ? ஆனால், தம்பி, நாம் எல்லாரும் ஒன்று என்று ஒப்புக் கொள்கின்றோமோ? நான் வேறுசாதி, நீ வேறு சாதி; அவன் வேறு சாதி என்று நம்மில் நாமே ஆயிரக்கணக்கான சாதி குலங்களாகப் பிரித்துக் கொண்டுள்ளோம். உன்னுடன் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளைக் கேட்டுப்பார். சிலர் தங்களைப் பிராமணர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வர்; சிலர் தங்களைச் செட்டியார், முதலியார், பிள்ளைமார், பள்ளர், பறையர் என்று இன்னும் நூற்றுக்கணக்கான சாதிப் பெயர்களைக் கூறுவார்கள். அவர்கள் அத்துடன் நில்லாது இவன் இன்னவனைவிட உயர்த்தி, இவன் இவன் தாழ்ச்சி, இவன் வீட்டில் நாங்கள் தண்ணீரும் அருந்தமாட்டாம் இவன் வீட்டுப் பக்கமே நாங்கள் போகமாட்டோம் என்று பலவாறாக இழிவாகவும் பழிப்பாகவும் பேசிக் கொள்ளுவர்.

இவ்வகையான சாதிகளும் இழிவு தாழ்வுகளும் இவர்களில் மட்டு மன்றி இவர்கள் வழிபடுகின்ற தெய்வங்களிலும் வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்திருக்கின்றன தெரியுமா? சாதியின் பெயரால் அல்லது குலத்தின் பெயரால் மக்கள் பிரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் சமயத்தின் அல்லது மதத்தின் பெயராலும் மக்கள் பலவாறு

 

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/43&oldid=1164356" இலிருந்து மீள்விக்கப்பட்டது