பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசும் விரும்பினால் இத்திட்டத்திற்கு விளக்கமான நடைமுறை வடிவம் தருவதாகவும் அறிவித்திருந்தார். இத்திட்டம் சிறு நூலாக அவ்வப்போது வெளியிடப்பெற்று வந்துள்ளது. இதனால் மக்களிடையே ஐயா அவர்களின் திட்டத்திற்கு வரவேற்பு இருந்ததை அறியலாம்.

சாதி ஒழிப்புத் தொடர்பாக ஐயா அவர்கள் தாம் நடத்திய 'தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ் நிலம்' ஆகிய இதழ்களில் படைத்து வெளியிட்ட கட்டுரைகளும் பாடல்களும் தொகுக்கப்பெற்று இந்நூல் வெளிவருகிறது.

இந்நூலினுள், சாதியின் தோற்றம் சாதித் தீமைகள் பற்றிய விளக்கங்கள், சாதியத்தில் சமயத்தின் பங்கு சாதிக்கிறுக்கர்களின் நிலை, ஆளுவோர் நிலை, பார்ப்பனர் நிலை, பழந்தமிழர்ப் பெயர் நிலை, வாழ்நிலை, இதழ்களின் போக்கு, அறிஞர்கள் நிலை என்பனவற்றையெல்லாம் முறைப்பட விளக்கிச் செல்லும் பாவலரேறு, பொருளியலில் முன்னேறினால் சாதி ஒழியுமா என்பன போன்ற கூற்றுகளுக்கு விடை காண்கிறார். மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்தம் குறித்தும் ஐயா அவர்கள் விரிவாக விளக்கியுள்ள கட்டுரையும் இந்நூலினுள் இடம் பெற்றுள்ளது.

இந்நூல், சாதிகள் ஒழிந்து தமிழினம் ஓர்மையுற்று தலை நிமிர்ந்து முன்னேறி வாழ வேண்டும் என்று விரும்புவோர் படிக்க வேண்டிய - பரப்ப வேண்டிய நூலாக விளங்குகிறது.

இந்நூலுக்கு கணினி எழுத்தாக்கம் செய்த திரு.இராமதாசு, குட்டி என்கிற இளமுருகன், மெய்ப்பு திருத்திய தென்மொழி குழந்தை ஈகவரசன் ஆகியோர்க்குப் பதிப்பக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/7&oldid=1164377" இலிருந்து மீள்விக்கப்பட்டது