பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சாயங்கால மேகங்கள்

"எதை முடிவு பண்ண?”

“எல்லாத்தையும் தான்! நீங்க கராத்தே பண்றது... நீங்க ஹீரோவா, தோழனாங்கறது... எல்லாமே முடிவு ஆயிடும்!”

“நான் முடிவு பண்ணுவதற்குள் நீங்களே முடிவு பண்ணி விடுவீர்கள் போலிருக்கிறதே...”

“நீங்க மாட்டேன்னா சொல்லப் போறீங்க... வலிய வந்த சீதேவியை யாராவது காலாலே எட்டி உதைப்பாங்களா?”

இதைக் கேட்டு பூமிக்கு உள்ளூரச் சிரிப்பாயிருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வருவதாக ஒப்புக்கொண்டு அந்த மனிதருக்கு விடை கொடுத்தான்.

“கண்டிப்பா வந்துடுங்க... நான் கார் அனுப்பனுமா?”

“வேண்டாம். பக்கத்தில் தானே? நானே வந்து விடு கிறேன்.”

அவர் போய்ச் சேர்ந்தார். மெஸ் வேலைகளையெல்லாம் முடித்து கொண்டு போய்ப் பார்க்கலாம் என்றுதான் அவன் நினைத்தான். சித்ரா அவனைக் கேலி பண்ணினாள். -

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் பக்கத்துச் சாலையிலேயே இருந்ததால் அவன் மிக எளிதாக நடந்தே போய்விட முடிந்தது.

கனகசுந்தரம் ஸ்டோரி டிஸ்கஷனுக்குச் சரியாக ஒன்பது பேரைத்தான் அழைத்திருந்தார். ஜிகினாவாக மின்னிய இரண்டு மூன்று இளம் பெண்கள், வேறு சில ஆட்கள் எல்லாரும் வந்து இருந்தார்கள்.

பூமி உள்ளே நுழைந்ததும் கனகசுந்தரம் அவனை உற்சாகமாக வரவேற்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். என்ன நிறம் என்று தெரியாமல் பூச்சு வேலையினால் மின்னிய இளம் எக்ஸ்ட்ரா ஒருத்தி திடீரென்று “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? எங்கேன்னு நினைவு வரல்லே” என்று பூமியிடம் கேட்டாள்.