பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

101

அவனை மடக்கி நிறுத்தப் பார்த்தார் கனக சுந்தரம். பூமி மடங்கி நிற்கவில்லை. பிடிவாதமாகக் கிளம்பி விட்டான். சித்ரா வேறு இன்னும் வீட்டுக்குப் போகாமல் மெஸ்ஸில் அவனுக் காகக் காத்திருப்பாள். அன்றைய வரவு செலவுக் கணக்கு முடிக்க வேண்டும்.

பழைய பாலாஜி நகர் வீட்டில் இருந்திருந்தால் சித்ராவால் இவ்வளவு நேரங்கழித்துப் போக முடியாது. அவள் பக்கத்திலேயே அப்பர் சாமி கோயில் தெருவுக்கு வந்திருந்ததால் நேரத்தைப் பார்க்காமல் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவமுடிந்தது. சில நாட்களில் முத்தக்காளுக்குத் துணையாக அவள் மெஸ்ஸிலேயே தங்கும்படி கூட நேர்ந்திருக்கிறது. முத்தக்காளின் தனி அறையிலேயே அவளோடு தங்கிக்கொண்டிருந்திருக்கிறாள் சித்ரா. அப்படி ஓர் அந்யோந்யம் அவர்களுக்குள் உருவாகியிருந்தது.

ஆட்டோ -டாக்ஸி யூனியனின் பெரிய தலைவர்கள் சிலர் தலையிட்டதன் பேரில் பூமியின் பேரில் போடப்பட்டிருந்த பொய் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டிருந்தது. முத்தக்காளுக்கு உதவுவதற்காக நிரந்தரமாய் ஆட்டோவை ஓட்டுவதற்கு வேறு ஆள் அமர்த்தி விட்டு மெஸ்ஸில் இருந்தான் பூமி. மெஸ் முன்னைப் போல் பல மடங்கு வளர்ந்து பெருகி லாபகரமாக நடக்கத் தொடங்கியிருந்தது. பூமியும் சித்ராவும் உடனிருந்து உதவுவதால்தான் இந்த வளர்ச்சி என்பது முத்தக்காளுக்கும் புரிந்து தான் இருந்தது.

ஹோட்டல் குபேரா இண்டர் நேஷனலில் ‘ஸ்டோரி டிஸ்கஷன்’ என்ற பெயரில் கனகசுந்தரம் நடத்திய அரட்டைக் கச்சேரியிலிருந்து தப்பி மெஸ்ஸுக்குத் திரும்பிய இரவு பூமிக்கு அங்கே வேறொரு சோதனை காத்திருந்தது.

மறு நாள் காலையில் பயன்படுத்துவதற்கு இட்லி மாவரைத்து முடித்ததும் மாவரைக்கிறவர் உரலடியில் வழுக்கி விழுந்து இடுப்புப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரால் வேலை செய்ய முடியாதபடி ஆகிவிட்டது. காலை 4 மணிக்கு