பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சாயங்கால மேகங்கள்

மனப்பான்மை மக்கள் சுதந்திரம் அடைந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழிந்தும் இங்கு நீடிக்கிறது.

தொகையும் அளவும்தான் வித்தியாசப் பட்டதே ஒழிய எல்லா மட்டங்களிலும் கொடுப்பவர், வாங்குபவர் தரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப நாட்டில் லஞ்சம் தொகை உயர்ந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து கொண்டேயும் இருந்தது. நகரின் உணவு விடுதிகள், கார்ப்பொரேஷன் அதிகாரிகள், அலுவலர்களின் பிடியில் சிக்கி அவதிப்படுவது பற்றிப் பூமி நிறையக் கேள்விப்பட்டிருந்தான்.

இன்று தானே அந்த அநுபவத்தை அடைந்து விட்ட போது அவனுக்கு எரிச்சலாயிருந்தது. முத்தக்காள் மெஸ்ஸைப் போல் ஒரு சிறிய உணவு விடுதியில் இருபது ரூபாய் முப்பது ரூபாய்க்குச் சாப்பிட்டு விட்டுக் காசு தராமல் கையை விரிக்கிற கார்ப்பொரேஷன் அதிகாரி தன் அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி ஒரு தொழிலை எப்படி மிரட்டமுடியும் என்பது புரிந்தது. மிகவும் கசப்பாகவே நேருக்கு நேர் புரிந்தது.

பூமி; குறுக்கிட்டுப் பேசியதும் அவர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பணம் போட்டு பில்லைக் கட்டி முடித்தார்கள். போகும்போது பூமியைப் பார்த்து முறைத்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்த ஆத்திரம் பூமிக்குப் புரிந்தது. வயிறு புடைக்கத் தின்று விட்டுக் காசு கொடுக்காமல் ஏப்பம் விட்டபடி குஷாலாக நடந்து போகும் சுதந்திரத்தை இத்தனை நாளாக அநுபவித்து விட்டு இப்போது விட்டுக் கொடுப்பது சிரமமாகத்தான் இருந்தது.

கோயில் காளைகள் போல் எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் புகுந்து இஷ்டம் போல் மேயும் இப்படிப்பட்ட கூட்டம் சுதந்திர இந்தியாவில் இன்று எல்லாத் துறைகளிலுமே இருந்தது.

பூமி இந்தக் கோயில் காளை மனப்பான்மையை அறவே வெறுத்தான். சக இந்தியனைச் சக இந்தியனே சுரண்டும்