பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

111

அந்த மெஸ்ஸுக்கு வாடிக்கையாளர்களான சில டாக்ஸி டிரைவர்கள் ஒரு புதிய பிரச்னையோடு பூமியை அணுகி அவன் உதவியை நாடினர். புதுவிதமான திருட்டுக்களும், கொள்ளைகளும் நகரில் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.

ஓர் ஏழை டாக்ஸி டிரைவருக்கு நேர்ந்த அநுபவம் எல்லாருடைய கண்களையும் திறந்துவிடப் போதுமானதாயிருந்தது.

முத்துக்காளை என்ற பெயரையுடைய அந்த டாக்ஸி டிரைவர் அன்று பகல் முழுவதும் பல சவாரிகளுக்கு அலைந்து சம்பாதித்த பணத்தோடு இரவு பத்துவரை ஓட்டலாம் என்றெண்ணி மவுண்ட்ரோடு புகாரி வாசலில் டாக்ஸியோடு காத்திருந்தார். காக்கிபேண்ட் பாக்கெட்டில் மீட்டர் வசூல் பணம் இரு நூறு ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்று நல்ல முகூர்த்த நாள் சரியான வசூல்.

இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு மூன்று இளைஞர்கள் வந்து பல்லாவரத்துக்கு அவசரமாகப் போய்த் திரும்ப வேண்டும் என்றும் மீட்டருக்கு மேல் என்ன ஆனாலும் தருகிறோம் என்றும் கூறி வற்புறுத்தினார்கள். சவாரிகள் முடிந்து டாக்ஸி உரிமையாளரான சேட்டிடம் போய் மீட்டர் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்து விட்டுத் தனக்குச் சேர வேண்டிய தொகையை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப வேண்டிய நேரம் ஆகி விட்டது என்றாலும் குழந்தை குட்டிக்காரரான முத்துக்காளை கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல்லாவரம் சவாரிக்கு இசைந்தார். அந்தச் சவாரியில் மோசடி எதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் போல் தோன்றினர். அவர்கள் டிரஸ் செய்து கொண்டிருந்த விதம் எதுவுமே சந்தேகத்துக்கு உரியவையாகப்படவில்லை. அந்த அகாலத்தில் பல்லாவரம் ஜி. எஸ். டி. மெயின் ரோடிலிருந்து ஆள் நடமாட்டமற்ற ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு