பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சாயங்கால மேகங்கள்

அந்த அம்மாள், தன் சொந்த முயற்சியாலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து ஒரு கம்பெனி வேலையைத் தேடிக்கொண்டு படிப்படியா முன்னேறி இன்று மானேஜருக்கு ஸ்டெனோவாக இருக்கிறாள்.

மானமாகத் தன் வருமானத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிற அந்தக் குடும்பத் தலைவிக்கு இப்போ ஒருபுதுச் சோதனை வந்திருக்கு. அவளோட பெண் காலேஜிலே பி. ஏ. முதல் வருஷம் படிக்கிறா. ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள ஒரு பார்லிமெண்ட் மெம்பரோட மகன் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்குத் தாங்க முடியாத தொல்லை கொடுக்கிறான். அந்தப் பெண் கொஞ்சம் அழகு அவ வீட்டை விட்டுக் காலேஜுக்குக் கிளம்பறப்போ காலேஜிலிருந்து வீடு திரும்பறப்போ விடாம அவளைத் துரத்தறான். இரட்டை அர்த்தமுள்ள சினிமாப் பாட்டை எல்லாம் பாடிக் கூப்பிடறான். தைரியமா வீட்டைத் தேடி வந்து “உனக்குப் பூ வாங்கிட்டு வந்திருக்கேன். புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்” னு நாலு பேர் முன்னாலே எடுத்து நீட்றான். போலீஸில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துப் பார்த்தாங்க போலீஸ் ஏன்னே கேட்கல. ‘பார்லி மெண்ட் மெம்பரோட மகன்’ கிறதாலே மத்தவங்க தலையிடறதுக்கே பயப்படறாங்க...இந்தக் குடும்பத்துக்கு மானம் போகுது.

“அவன் பூவும், புடவையும் வாங்கிக் கொண்டு வந்து நீட்டற தைரியத்தையும், தோரணையையும் பார்த்தால் ‘இவனை எங்களுக்குப் பிடிக்கலே. இவனோட எங்களுக்குச் சம்பந்தம் இல்லே. இவன் வர்றதைப் போறதை நாங்க வெறுக்கிறோம்னு’ அம்மாவும், பொண்ணும் சத்தியம் பண்ணினாக்கூட மத்தவங்க நம்பமாட்டாங்க போலிருக்கு.”

“மூஞ்சியிலே காறித் துப்பிச் சீ போடா நாயே என்று சொல்லித் துரத்துவதுதானே?”

அந்தப் பையனுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லீங்க...நாமஎன்ன சொன்னாலும், எப்படித்-