பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

119

திட்டினாலும் அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்.”

“அந்தப் பையனின் தந்தையைச் சந்தித்து மகனைக் கண்டிக்கச் சொல்லிப் பேசிப் பார்ப்பது தானே? அப்போதாவது பையன் திருந்தலாமே.

பெண்ணின் அம்மாவும், நானும் வெகு சிரமப்பட்டு முயன்று அவரைச் சந்தித்தோம். அவரு டெல்லியிலும், மெட்ராஸிலுமா மாறி மாறி இருக்கிறதால பார்க்க முடியாதுன்னு தட்டிக் கழிச்சாங்க. கடைசியா எப்படியோ பார்த்துப் பேச முடிஞ்சுது. விஷயத்தை நாகரீகமா எடுத்துச் சொன்னோம். அவர் எல்லாத்தையும் கேட்டபின் ‘கூலா’ “என்ன செய்யறதும்மா; இந்தக் காலத்துப் பசங்க எல்லாருமே சின்ன வயசிலே இப்படித்தான் ஜாலியா அலையறாங்க... நாம் சொன்னா எங்க கேட்கப் போருங்க... உங்களுக்கு நான் என்ன செய்யணுமோ கூசாமக் கேளுங்க. பணம் கஷ்டம்னாக்கூட நீங்க சொல்லலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்ய முடியும்” என்பதாக ரேட் பேச ஆரம்பிப்பதுபோல் அவர் சொல்லிவிட்டார்.

“எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கஷ்டப்படும் ஏழைப் பெண்கள் எந்த ரேட்டுக்கும் கிடைப்பார்கள் என்று பார்க்கிற அப்பனிடம் போய் மகனின் இழி செயலுக்கு நியாயம் தேடமுயன்ற எங்கள் அறியாமைக்காக வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பி வந்து சேர்ந்தோம். உங்களிடம் சொல்லி அந்தப் பையனை எச்சரித்து வைக்கலாம் என்று சித்ரா யோசனை சொன்னாள். அந்தப் பையன் இப்படியே தொடர்ந்து தேடி வந்துகொண்டிருந்தால் பின்னால் தன் பெண்ணுக்கு எந்த நல்ல இடத்திலுமே கல்யாணம் ஆகாமற் போய்விடுமோ என்று அந்தம்மா பயப்படறாங்க! வேலையை விட்டு விட்டு இந்த ஊரிலிருந்தே, ஒழித்துக் கொண்டு போய்விடலாம்னு நினைக்கிற அளவுக்குக் கூட மனக்கஷ்டம் வந்தாச்சு அவங்களுக்கு” என்றாள் தேவகி.

இதைக் கேட்டு பூமி பெருமூச்சு விட்டான். பின்பு சொன்னான்,