பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

125

மாணவிகள் சிலர் நின்றிருந்தனர், வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன, ஒரே அட்டைதான்.

பூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அநுமானத்தில் இவன்தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், “நீங்கதானே மிஸ்டர் குமரகுரு? பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்ச் செல்வத்தினுடைய சன்...?”

“ஆமாம்! சுருக்கமா இங்கே ‘குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் ‘காம்பஸ் ‘லே நான்தான் அத்தினிபேருக்கும் குரு.”

பூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, “ஒண்ணும் புரியலேயே? நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள்? உண்மையில் படிக்கிறீர்களா? அல்லது கற்பிக்கிறீர்களா?”

“அப்படிக் கேளு சொல்றேன்...படிக்கிறேன்னுதான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க...”

கழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளி வந்தன. பூமிக்குக் குமட்டியது.

“மிஸ்டர் குமரகுரு! உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணுமே!...”

இப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான்.

சிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, “நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேச்சு வழக்கம். நீங்க... என்னடான்னா ..."