பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

11

மகாகவி பாரதியார் கவிதைகளை எடுத்தான். புதுமைப் பெண் என்ற பெண் விடுதலைப் பாடல் அச்சாகி இருந்த பக்கம் தற்செயலாக விரிந்தது.

"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.”

என்ற வரிகள் அவன் பார்வையில் பதிந்தன, நவீன உலகம் பேசுகிற பெண் விடுதலை இயக்கம் பற்றி அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கும் தமிழ்நாட்டு மகாகவியின் தீர்க்கதரிசனம் அவனை மெய்சிலிர்க்கச் செய்தது.

‘ஞானச் செருக்கு’ என்ற அந்தக் கம்பீரமான பதச்சேர்க்கையின் அழகும் சற்றுமுன் சந்தித்த சித்ராவின் அழகும் உடன் நிகழ்ச்சியாகச் சேர்ந்தே அவன் நினைவில் மேலெழுந்தன.

நேரெதிர் எதிர்க்குணமுள்ள நெருப்பின் பிரகாசத்தையும், சந்தனத்தின் குளிர்ச்சியையும் அளவாய் இணைத்தாற் போல் ஞானம் என்கிற உடன்பாட்டுக் குணத்தையும், செருக்கு என்ற எதிர்மறை குணத்தையும் அளவாக, ஆழகாக இணைத்த பதச்சேர்க்கையில் மனம் நெகிழ்ந்து களித்தான் அவன். ‘ஞானமில்லாத செருக்கும், செருக்கில்லாத ஞானமும். சோபிப்பதில்லை’ என்பதை எவ்வளவு நாசூக்காக உணர்த்துகிறார், மகா கவி -- என்று பூமிதாதன் அந்தப் பதப்பிரயோகம் என்கிற சொல் ராகமாலிகையிலும், அதேபோல் அளவாய், அழகாய் இணைந்திருந்த சித்ரா என்கிற சௌந்தர்ய ராகமாலிகையின் தோற்ற மயக்கத்திலும் மூழ்கினான்.

அந்த இடத்தில் சவாரி எதுவும் சிக்கவில்லை. அவன் வந்து நிறுத்திய பின், அரைமணி நேரத்திற்குள் மேலும் இரண்டு மூன்று ஆட்டோக்கள் வேறு வந்து நின்றுவிட்டன்.