பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

129

ஒப்புக்கொண்டார். சித்ராவுக்கும் தேவகிக்கும் அதைக்கேட்டுச் சற்றே தெம்பு வந்தது.

பூமியையும் உடன் வரவேண்டும் என்று அழைத்தார்கள் அவர்கள் “பரமசிவம் அண்ணாச்சி வந்தாலே போதுமே? நான் வேறு எதற்கு?” என்று மறுத்துப் பார்த்தான் அவன். பரமசிவமே அவனும் உடன் வந்தாக வேண்டுமென்று வற்புறுத்தினார்.

அங்கே பாலாஜி நகருக்கும் லாயிட்ஸ் ரோடுக்கும் நடுவே ஓர் ஒடுக்கமான சந்தில் இரயில் கம்பார்ட்மெண்ட் போல் இருபுறமும் நீண்ட குடியிருப்புக்கள் அடங்கிய அந்த ஒண்டுக் குடித்தன ஸ்டோர் அமைந்திருந்தது.

பூமி, பரமசிவம், தேவகி, சித்ரா எல்லாரையும் சேர்த்துப் பார்த்தபோது அந்த நடுத்தர வயதுத் தாய்க்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தது.

“ஊர் ரொம்பக் கெட்டுப்போயிருக்கு. தடிமாடு மாதிரி எப்பவும் வயசுப் பெண்ணைச் சுற்றிச்சுற்றி வரான் ஒரு போக்கிரி. அதைப்பத்திப் போலீஸ்லே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தா அங்க போலீஸ் அதிகாரிகளே ‘நீங்கதான் கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பெரிய எடத்துப்புள்ளை. நாங்க ஒண்ணும் ‘டச்’ பண்ணிக்க முடியாது. தண்ணியில்லா காட்டுக்கு மாத்திப்பிடு வாங்கன்னு நம்மை எச்சரிச்சு அனுப்பறாங்க. என்னை மாதிரி ஏழை பாழைங்க என்னதான் பண்ண முடியும்னு தெரியலே. ஏதோ தெய்வமாப் பார்த்து உங்களை எல்லாம் இங்கே அனுப்பி வைச்சிருக்கு... நீங்கள்ளாம் பார்த்துத்தான் ஒரு வழி பண்ணணும்’ என்றாள் நிராதரவான அந்தத் தாய்.

“பயப்படாமல் என்னவோ ஏதோ என்று யோசிக்ககாமல் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். அந்தத் தறுதலை உங்கள் பெண்ணைத் தேடிவரும்போது அவளே அவனிடம் நைச்சியமாகப் பேசி மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பார்க்கில் வந்து தனியே தன்னைச் சந்திக்