பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

149

பழகி விடும் மனப்பான்மை பலருக்கு வந்து விடுகிறது” என்று பூமி சித்ராவிடம் சொன்னான்.

அவனுடைய கருத்து நூறு சதவிகிதம் சரியானது என்று பரமசிவம் ஒப்புக் கொண்டார். அதிகாரிகளின் பேராசையினாலும், பொது மக்களின் சோம்பலாலுமே லஞ்சம் அசுர வளர்ச்சி பெறுகிறது என்பதுதான் சரியான கணிப்பு என்பதற்குப் பல உதாரணங்களைப் பரமசிவம் எடுத்துக் கூறினார்.

பூமியின் மேல் சித்ராவின் மதிப்பும் பிரியமும் உயரக் காரணமான பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

அவர்கள் வாழ்ந்த அதே மைலாப்பூர்ப் பகுதியில் வேறொரு மத்தியதர ஹோட்டல்காரரின் மகனுக்குத் திருமணம் வந்தது.

அந்த ஹோட்டல் உரிமையாளரே குடும்பத்தோடு நேரில் வந்து அழைத்துவிட்டுப் போனார். அவர் தேடி வந்தபோது முத்தக்காள், சித்ரா, பூமி மூவரும் இருந்தார்கள். மூவருக்கும் தனித்தனியே பெயர் எழுதி அழைப்பிதழ்கள் எடுத்துக் கொடுத்திருந்தார் அவர் மூவருமே திருமணத்துக்குக் கண்டிப்பா வரவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தார். பூமியும் சித்ராவும் அந்தத் திருமணத்திற்குப் போய்விட்டு வரவேண்டும் என்றாள் முத்தக்காள்.

“நம்மைப் போலலே ஒரு வியாபாரி மெனக்கெட்டுத் தேடி வந்து நேரிலேயே அழச்சிட்டுப் போறாரு. நான் மட்டும் போறது நல்லா இருக்காது. நான் கலியாணம் முடிஞ்சப்புறம் ஒரு நாள் வீட்டுலே போய் விசாரிச்சுட்டு வந்துடறேன். நீங்க ரெண்டு பேரும் முகூர்த்தம் ரிஸப்ஷன் எல்லாத்துக்குமே போய்த் தலையைக் காமிச்சிட்டு வந்திடுங்க...”

“பார்ப்போம்! இன்னும் நிறைய நாள் இருக்கிறதே?” என்றான் பூமி. அப்படி அவன் கூறியதில் இயல்பான தொனி இருந்ததே ஒழியச் சுவாரஸ்யமோ, அசுவாரஸ்யமோ தொனிக்கவில்லை.