பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சாயங்கால மேகங்கள்

அந்தத் திருமண நாள் வந்தது. மறுநாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் என்று ஞாபகம் வரவே சித்ரா மறுபடியும் பூமியை விசாரித்தாள்.

“காலையில் வேண்டாம்; மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் பரமசிவம் அண்ணணுடைய புத்தகம் வழங்கும் கடைக்கு வந்துவிட்டால் நல்லது. தயாராக அங்கே நான் காத்திருக்கிறேன்” என்றான் பூமி. இப்படிக் கூறியதிலிருந்து அவன் முகூர்த்தத்திற்குப் போகாமல் மாலை வரவேற்புக்குப் போக விரும்புகிறான் என்று அவள் அநுமானம் செய்து கொண்டாள்.

ஆனால் மாலையில் அவள் பரமசிவம் அண்ணனுடைய நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றபோது அங்கே அவளுக்கு ஆச்சரியம் காத்திருத்தது. பூமி அங்கே வரவே இல்லை. அப்போது மாலை மணி ஐந்தரை. ஆறுமணிக்குத் திருமண வரவேற்பு. அப்போது புறப்பட்டால்தான் சரியாயிருக்கும். பூமி ஏன் இன்னும் வரவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. பரமசிவம் அண்ணனிடம் கேட்டாள் அவள்.

“அநேகமாக அவன் இந்தத் திருமணத்திற்குப் போக மாட்டான் சித்ரா! காரணத்தை அவனே உன்னிடம் நேரில் சொல்வான். அவன் வருகிறவரை கொஞ்சம் பொறுமையாக இரு!” என்றார் அவர்...

ஆறு ஆறரை மணி சுமாருக்குப் பூமி வந்து சேர்ந்தான்.

“தாமதத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன். எப்படியும் சொன்னபடி வந்து விட்டேன். ஆனால் நாம் திட்டமிட்டபடி திருமண வரவேற்புக்குப் போகப் போவதில்லை. கடற்கரைக்கோ, பார்க்குக்கோ வேறு எங்காவதோ போகலாம்.”

“ஏன்? அவர் நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாரே..?”

“அழைத்தார்தான்! ஆனால் கல்யாணத்தை ஒரு வியாபாரமாக நடத்துகிறார். பெண் வீட்டாரைக் கசக்கிப்-