பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

சாயங்கால மேகங்கள்

காரணமாக முத்தக்காள் உள்ளே இருக்கிற ஆட்கள் மீது மட்டும் சந்தேகப்பட்டாள்.

அதே நேரத்திற்கு மின்சாரத் தடங்கல் சில நாட்கள் தொடர்ந்த போது லஸ் வட்டாரத்தில் வேறு பல கடைகளிலும் இப்படித் திருட்டுக்கள் நடந்தன. எல்லாக் கடைக்காரர்களும் போலீசில் புகார் செய்தார்கள். அவர்கள் எவ்வளவோ முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேசம் முழுவதும் திருடர்களை விடப் போலீஸ்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதற்குப் பதில் போலீஸ்காரர்களைவிடத் திருடர்கள் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள் என்பது போல் தோன்றியது. பறி கொடுத்தவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். நாட்கள் ஓடின.

அந்தச் சமயத்தில்தான் பூமியே கேஷ் டேபிளில் அமர்ந்திருந்த ஓர் இரவில் இது நடந்தது. அன்றும் திடீரென்று மின்சாரத் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அருகில் டார்ச் இருந்தும் பயன்படுத்தாமல் வேண்டுமென்றே கேஷ் டேபிளில் இருந்து எழுந்திருந்து போவது போல் போக்குக் காட்டி விலகி நின்றான் பூமி.

அப்போது தான் அந்த ஆள் பிடிபட்டான். பூமி முத்தக்காளைப் போல் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டவில்லை. விளக்கு அணைந்த சிறிது நேரத்தில் திருட முயன்ற ஆளைப் பிடித்த சுவட்டோடு உள்ளே அறைக்கு அழைத்துச் சென்று. விட்டான். அறைக்குப் போய் அரிக்கேன் லாம்ப் வெளிச்சத்தில் பார்த்தால், திருடன் ஒரு சின்ன வயசுப் பையன். பூமி அறைவதற்காக கையை ஓங்கியதுமே பயந்து அலறத் தொடங்கி விட்டான் அந்தப் பையன்.

இந்த அளவுக்கு பயந்து நடுங்குகிற அவன் இத்தனை திருட்டுக்களை எப்படி துணிந்து செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அவனை அடிக்காமல் உள்ளதைச் சொல்லும்படி பூமி விசாரித்தான். பையன் ஏறக் குறையும். அழுதே விட்டான்.