பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சாயங்கால மேகங்கள்

சிரமப்பட்டுத்தானே ஆகவேண்டும்? நானே துணிந்து சிரமப் பட்டுவிடத் தயாராயிருக்கிறேன்”

“தொடர்ந்து எல்லாவற்றிற்குமே நாம்தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! வேறு யாரும் முன் வரவில்லையே?”

சித்ராவின் வாதம் பூமியைத் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவன் அந்தச் சோதனையில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டான். மெஸ்ஸில் திருடு போன தொகையை மீட்பதற்காக மட்டுமல்லாமல் பலருடைய பல நியாயங்கள் எங்கே பலியாகி இருந்தனவோ அங்கே அவற்றைத் தட்டிக் கேட்டுத் திரும்பப் பெறுவதற்கு முயல வேண்டும் என்ற முனைப்பு அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த நாகரிகமான கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கப் போலீஸார் எந்த அளவு ஒத்துழைப்பார்கள் என்று அறிய போலீஸ் கிரைம் பிராஞ்சில் பொறுப்புள்ள அதிகாரி ஒருவரை அணுகிப் பேசிப் பார்த்தான் பூமி. அவர்கள் சிரத்தைக் காட்டவில்லை. குறிப்பிட்ட ஆளின் அரசியல் செல்வாக்கை எண்ணிப் பயப்பட்டார்கள். பூசி மெழுகித் தட்டிக் கழித்தார்கள்.

“உங்களுக்கு ஏன் சார் வம்பு? தொல்லையை விலைக்கு வாங்காதீர்கள்” என்று பூமியை அந்தப் போலீஸ் அதிகாரி எச்சரித்தார்.

திருட்டுக் கும்பலிலிருந்து பிடிபட்டுத் திருந்தி வந்து பூமியால் வேலையளிக்கப்பட்ட பையனும் தன் முன்னாள் எஜமானனை காண்பித்துக் கொடுக்க அஞ்சினான். திருடர்களைப் பிடிப்பதற்காகவே உத்தியோகம் பார்க்கும் போலீஸ்காரர்களும் அஞ்சினார்கள். காரணம் அந்தத் தவறுகளின் மற்றொரு நுனி செல்வாக்குள்ள ஓர் அரசியல் கட்சியில் போய்ச் சேர்ந்திருந்தது. பின்னிப் பிணைந்திருந்தது