பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சாயங்கால மேகங்கள்

ஓட்டப் பழகி லைசென்ஸ் எடுத்திருந்தது இங்கே பயன்பட்டது. ஒரு வீம்புடனும் வீறாப்புடனும் தான் அவன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருந்தான், படித்தவர்கள் உடல் உழைப்பை ஒதுக்குவதை இயல்பாகவே அவன் வெறுத்தான்.

ஏறக்குறைய விடியும் வேளை நெருங்கி விட்டது. மணி நாலரை. காற்று குளிர்ந்து வீசியது. இருள் பிரியத் தொடங்கிவிட்டது. பூமி அந்த இரவைத் தூக்கம் இன்றியே கழித்து விட்டான். இரவும் முடியத் தொடங்கியிருந்தது.

தாய் காலமாகி ஓர் இரவு கழிந்து விட்டது. இந்நேரம் கிருஷ்ணாம்பேட்டையில் அவன் தாய் வெந்து தணிந்து சாம்பலாகி இருப்பாள்.

கன்னையனும் குப்பன் பையனும் எழுந்து சுறுசுறுப்பாகி விட்டார்கள். கன்னையன் பூமியைக் கூப்பிட வந்தான்.

“கிருஷ்ணாம்பேட்டைக்குப் போகணுமே? கிளம்பலாமா? -- ராப்பூராத் தூங்கலே போலிருக்கே...பட்டினியாத்தான் போவணும்... ரொம்ப பசியாயிருந்தா ஒரு டீ வேணாக் குடிச்சிக்க.”

“வேண்டாம்! இதோ, குளித்து முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.”

தெரிந்த டிரைவர் ஒருவன் சென்ட்ரலுக்கு சவாரி தேடிப் போகிற வழியில் அவர்களைக் கிருஷ்ணாம்பேட்டையில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டுப் போனான். அஸ்தி சேகரித்த பின்னர் கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து திரும்ப வேறு ஒரு தெரிந்த டாக்ஸியைப் பிடித்துக்கொள்ளலாம் என்றான் கன்னையன். பூமிநாதனுக்கு மிகவும் தளர்ச்சியாகத்தான் இருந்தது. முதல் நாளிரவு தூங்காத அலுப்பு வேறு. உடம்பில் அசதி சுமந்திருந்தது.

சடங்குகளில் அவனுக்குப் பெரிதாக நம்பிக்கை எதுவும் கிடையாது. சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற நாகரிகத்-