பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

207

"என்னமோ நடந்திருக்கிறது? எனக்குப் பயமாயிருக்கிறது.”

“என்ன நடந்திருக்கும்? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்? மன்னாரு கோஷ்டி அவனைக் கடத்திக் கொண்டு போயிருப்பார்கள். நான் பயப்படவில்லை, ஆனால் யோசிக்கிறேன். பயம் பிரச்னைகளைத் தீர்க்காது” என்றான் பூமி.

அன்றைக்கு முந்திய இரவு பையன் மெஸ்ஸிலிருந்தே வீடு திரும்பவில்லை என்பதால் இரவு வீடு திரும்புவதற்கு முன்பே அவன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

“அவனாகவே பயந்து ஸரண்டர் ஆகி மறுபடி மன்னாருவிடம் போயிருப்பான் என்றும் அநுமானிக்க வழி இருக்கிறதே” என்றாள் சித்ரா.

பூமி தான் அப்படி நினைக்கவில்லை என்றான்.

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த அந்தப் பகுதி குறுகிய சந்து பொந்துகள் கொண்டதாயிருந்தது. ஓரிடத்தில் ஒரு டீக்கடை வாசலில் நாலைந்து பேர் கும்பலாக நின்றிருந்தார்கள். ஸ்கூட்டர் அந்த டீக்கடையைக் கடப்பதற்கு முன் அந்தக் கும்பலிருந்து ஒருவன் குறுக்கே ஓடிவந்து சாலையை மறித்தான்.

உடனே ஸ்கூட்டரை வேகம் குறைத்து மெதுவாக்கிய பூமி, “பரர்த்துப் போ அப்பா” என்று சாலையை மறித்தவனை நோக்கிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னும் இருவர் அதே போல ஒடிவந்து சாலையில் மீதிமிருந்த இடத்தையும் மறித்துத் தடுத்தனர்.

அடுத்து வந்தவனிடம் இரண்டு மூன்றடி நீளத்திற்கு ஓர் இரும்புக் குழாய் கையிலிருந்தது. பூமிக்கு ஒரு விநாடி கூடத் தாமதமின்றி விஷயம் புரிந்து விட்டது. தான் காணாமல் போன பையனின் வீட்டைத் தேடிக் காலையில் வரக்கூடும்