பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சாயங்கால மேகங்கள்

"இப்படி. ஒவ்வொருத்தரா வந்து இங்கே நாலுபேர் சாப்பிட வர்ற எடத்திலே ஒப்பாரி வச்சுகிட்டு நின்னாங்கன்னா வியாபாரம் உருப்பட்டாப்லதான்.”

அந்த நிலையில் சித்ரா பூமிக்கு உதவ முன்வந்தாள்.

“நான் இந்தம்மாவை என்கூட வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன். நீங்கள் பையனைத் தேடி அழைத்துக்கொண்டு வருகிறவரை இவங்க என்கூடவே இருக்கட்டும்.”

பூமி அதற்கு உடனே சம்மதித்தான். சித்ரா அந்தத் தாயை ஆறுதல் கூறித் தேற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். முத்தத்காள் வேறு வேலையாகச் சென்றாள்.

அப்போது அங்கே பணி புரியும் சர்வர் ஒருத்தன் பூமியைத் தனியே அழைத்துச் சென்று அவன் அங்கே இல்லாது வெளியே போயிருந்த சமயத்தில் முத்தக்காள் சித்ராவிடம் இரைந்ததை எல்லாம் தெரிவித்தான். பதிலுக்கு முத்தக்காளிடம் சண்டை பிடிக்காமல் சித்ரா பொறுமையாயிருந்ததையும் தெரிவித்தான்.

பூமிக்கு நிலைமை புரிந்தது. சித்ராவின் பெருந்தன்மையையும், பரந்த மனப்பான்மையையும் அவன் வியந்தான். சாதாரணமாகத் தாங்கள் பாதிக்கப்பட்டதை பிறரிடம் கூறித் தூண்டிவிட்டுத் தங்களைப் போதித்தவருக்கு எதிரியாக அந்தப் பிறரையும் மாற்றி விடுவதுதான் பெண்களில் பலருக்கு இயல்பு. ஆனால் சித்ரா இதற்கு நேர்மாறாக அந்தச் சண்டையைத் தன் கவனத்துக்கே கொண்டு வராமலிருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.

முன்பு ஏற்கனவே முத்தக்காள் தனது அறியாமையாலும், குறுகிய மனப்பான்மையினாலும் பண விஷயத்தில் சித்ராவின் மேல் சந்தேகப்பட்டு இரைந்திருந்தாள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு மெஸ் பக்கம் வருவதையே தான் விரும்பவில்லை என்று சித்ரா கூறியிருந்தாள். பூமிதான் தனக்காக இனியும்