பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

263

"மனித உருவில்தான் இந்தக் காலத்து ராட்ஸ்சர்கள் திரிகிறார்கள். அவர்களைச் செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது...”

“இப்ப என்ன செய்யிறது? அந்தக் கிழவி கிட்ட உள்ளதைச் சொல்லிவிட வேண்டியதுதானே?”

“சொல்ல வேண்டியதுதான்! கொஞ்சம் பக்குவமாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லது சிறிது காலம் சொல்லாமல் பிறகு பொறுத்துச் சொல்ல வேண்டும்.”

பூமி முதலில் சித்ராவை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டான். வீட்டுக்காரர் தூக்கக்கிறக்கத்தோடு வந்து கதவைத் திறந்தவர் பூமியையும் அந்நேரத்தில் அவளோடு சேர்த்துப் பார்த்ததும் ஒரு தினுசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு விஷமத்தனமாயிருந்தது.

இப்போது அந்த அம்மாளிடம் பையன் கொலையுண்டதைச் சொல்லாதே! இங்கேயே அழுது புலம்பி மற்றவர்கள் முன்னால் கதறப் போகிறாள்! உன்னுடைய ஹவுஸ் ஓனர் அதைப் பார்த்துச் சத்தம் போட்டாலும் போடுவார். நான் பகலில் திரும்ப வருகிறேன். என் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்று பக்குவமாக அதைச் சொல்லிக் கொள்ளலாம். அதோடு சிறுது காலம் அந்தம்மாள் நம்முடனேயே இருக்கட்டும் என்று சித்ராவின் காதருகே கூறி அனுப்பினான் பூமி.

மப்டியில் அந்தத் தீவுக் கிராமத்துக்குப் போக இருந்த போலீஸ் பார்ட்டியோடு பூமியும் போக இருந்தான். முந்திய இரவு தன்னோடு வந்த நண்பர்களை அவன் இன்றும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஆட்டோ ஓட்டுகிறவரும் மானத்தைக் கெடுத்துக் கொண்டு அவர்கள் தன்னோடு அலைய வேண்டாம் என்று கருதி வீட்டுக்குப் போய் அவர்களை எழுப்பிக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விட்டுப் பூமி மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன போது காலை ஆறு மணியாகி விட்டது.