பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

265

"நான் சொன்னதெல்லாம் நிஜம்தான்! ஆனால் எப்படியோ போலீஸ் வரப்போகிறது என்று மோப்பம் பிடித்து ஆட்கள் தான் தப்பி விட்டார்கள், மயானத்திற்குப் போய் டெட்பாடியைத் தோண்டி எடுத்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடும்” என்று கூறித் தனக்கு நினைவில் இருந்த பாதையில் அவர்களைத் தீவின் மயானத்துக்கு அழைத்துச் சென்றான் பூமி.

அவசரம் அவசரமாகப் புன்னைமரப் புதரைக் கடந்து ஞாபகமாய் அடையாளத்தோடு நினைவு வைத்திருந்த சிலுவைக் குறியோடு கூடிய இடத்தைத் தரையில் தேடினால் அங்கே அப்படி எதுவுமே இல்லை.

அங்கே வரிசையாகச் சால் பிடித்துப் பாத்தி கட்டிப் பத்து பன்னிரண்டு வாழைக் கன்றுகளை நட்டுத் தண்ணீர் பாய்ச்சியிருந்தது. அந்தப் பழைய சமாதியையோ மண் மேட்டையோ சிலுவை அடையாளத்தையோ அங்கே அப்போது காண வில்லை.

உடனே பூமி பதற்றத்தோடு, “இதையும் மாத்திட்டாங்க சார்” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, இன்ஸ்பெக்டர், “எப்பிடி: சார் மாத்த முடியும்? நீங்க இடத்தை மறந்துட்டீங்களோ என்னவோ?” என்று பதிலுக்குக் கேட்டார்.

அவருக்குப் பதில் கூறாமல் பூமியே வாழைக் கன்றுகளைப் பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கினான். தயாராக மண்வெட்டியுடன் வந்திருந்த போலீசும் பிறரும் அவனோடு சேர்ந்து தோண்டினார்கள். நிறைய ஆழம் தோண்டியும் பலனில்லை.