பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சாயங்கால மேகங்கள்

நீங்கள் வந்ததில் நிரம்ப சந்தோஷம்! இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தெரியும்! எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலே இன்விடேஷன் பார்த்தேன், அப்புறம் லெண்டிங் லைப்ரரி பரம்சிவம் அண்ணாச்சி கிட்டவும் விசாரிச்சேன்.”

என்று சித்ரா பூமிக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்த போதே அவளுடைய தோழி தேவகி பூமியிடம் ஒரு கேள்வி கேட்டாள்:

“நீங்க நிஜமான கன அளவு உள்ள ஒரு பெரிய செங்கல்லையும் சில செங்கல்களின் அடுக்கையுமே உடைச்சிக்காட்டறீங்க, சில சினிமா நடிகர்கள் ரொட்டித்துண்டு அளவுக்கு லேசான சீமை ஓடுகளை உடைச்சிட்டு அதையே பெரிய செங்கல் உடைக்கிற சாகஸமாக விளம்பரப்படுத்திக்கிறாங்களே ?”

“சினிமாவில் எந்த முதல்தரமான கலையைத்தான் அவர்கள் அப்படி மூன்றாந்தரமாகவும் நான்காந்தரமாகவும் கொச்சைப் படுத்தாமல் மீதம் விட்டு வைத்திருக்கிறார்கள்? முதல்தரமான சங்கீதம், சினிமாவில் ஏழாந்தரமான டப்பாங்குத்து சங்கீதமாகிறது. முதல்தரமான நடனம் அரை நிர்வாணக் கேலிக் கூத்தாகிறது. முதல் தரமான கதை மூன்றாந்தரமான குடுகுடுப்பைக்காரன் சட்டையாக ஒட்டுப் போடப்படுகிறது. அவையெல்லாவற்றையும் போல் இன்று ஜுடா, கராத்தே, குங்ஃபூ ஆகியவைகளும் இங்கே ஆகிவிட்டன. ‘எந்த முதல்தரமான நல்ல கலையும், மூன்றாந்தரமானவர்கள் கைக்குப் போகும்போது அங்கே அது வெறும் பாசாங்காகவும், போலிப் பாவனையாகவும் ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியாது.’ முதலாளித்துவ சமூக அமைப்பில் கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மரியாதை கிடைப்பதைவிட.. அவற்றுக்கு முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கே அதிக மரியாதை கிடைக்க முடியும், சினிமாவும் அப்படி ஒரு பணக்காரக் கலை.”