பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

சாயங்கால மேகங்கள்

"பயத்தினாலும் தாழ்வு மனப்பான்மையிலும் இன்றைக்கு முதல் தவற்றைச் செய்யத் தொடங்கினால் பிறகு தொடர்ந்து தவறுகளாகவே செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு நான் உங்களை அனுமதிக்கப் போவதில்லை.”

“பூமி முத்தக்காளையும், சித்ராவையும் தடுத்து நிறுத்திவிட்டுச் சட்டைக் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு வாசல் பகுதிக்குப் பாய்ந்தான்.

அவனை வழி மறித்து அவசர அவசரமாகச் சித்ரா ஏதோ சொல்ல வந்தாள். அதைக் காதில் வாங்காமலே, “அன்றைக்குப் பாலாஜி நகர் ஸ்கூலில் பார்த்ததை விட உயிரோட்டமுள்ள நிஜமான கராத்தே டிமான்ஸ்ட்ரேஷனைப் பார்க்க ஆசையிருந்தால் வாசலுக்கு வரலாம்” என்று புன்னகையோடு திரும்பி அவளிடம் கூறிவிட்டு விரைந்தான் பூமி.

அந்த மெஸ் முகப்பில் எப்போதும் ஆட்டோ டாக்ஸி டிரைவர்களின் கூட்டம் இருக்கும். அப்படித் தன் கூட்டம் என்று ஆதரவுக்கு யாருமே இல்லாவிட்டாலும் அப்போது தனியாக அவர்களைச் சமாளிக்க முடியும் என்ற தைரியமும் நம்பிக்கையும் பூமிக்கு இருந்தது. யாரோ ஓர் அரசியல்வாதியின் ஆணவத்தைத் தூபதீபம் காட்டி ஆராதிப்பதற்காக ஏழை முத்தக்காள் போன்றவர்களைத் துன்புறுத்துவதைப் பூமி வெறுத்தான். அரசியல் வசூல்கள் என்பவை எல்லாமே அவனுக்கு அருவருப்பூட்டின.

அவன் வெளிப்பட்டு வாயிற்பக்கம் வந்தபோது தொந்தியும், தொப்பையுமாக அந்த அரசியல் கட்சிக்காரர்கள் நாலைந்து பேர் கூடி நின்று அவனைக் கறுவிக் கொண்டிருந்தார்கள். பூமி எடுத்தவுடன் பேச்சில்தான் தொடங்கினான். “'வசூல் என்கிற பேரில் ஏழை எளியவர்களையும், ஆதரவற்றலர்களையும் இப்படி வாட்டி வதைப்பது. உங்களுக்கே நல்லா ‘யிருக்கிறதா?”

“அதைக் கேக்க நீ யாருடா? பெரிய ஏழைப்பங்காளனோ? -- என்று கூட்டமாக அவர்கள் அவன்