பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

83

ஓர் ஆறுதலுக்காகவாவது அவளை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துத்தான் ஆகவேண்டும். பார்க்காவிட்டால் அது இன்னும் தப்பாகப்படும். பார்க்கும்போது அவள் படலாம் என்று எதிர்பார்க்கப் பெறுகிற கோபத்தையும், எரிச்சலையும், வெறுப்பையும் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். சித்ராவே அவனைக் கேட்டான்:

“பாவம்! இது இத்தனை பெரிய கலவரத்திலும் நஷ்டத்திலும் கொண்டு போய்விடும் என்று அவங்க எதிர்பார்த் திருக்கவே மாட்டாங்க.”

“பாவிகள்! ஒரு வாரத்துக்கு மெஸ் நடக்க முடியாதபடி பண்ணி விட்டார்கள்.”

“நீங்கள் தலையிடாம விட்டிருந்தா வசூலுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது பணம் கொடுத்துச் சமாளிச்சிருப்பாங்கேளா என்னவோ?”

தன் மனத்தில் ஓடுகிறாற் போன்ற அதே நினைவுகள் அவள் மனத்திலும் ஓடுவது பூமிக்கு அப்போது புரிந்தது. லாபம் தருகிற தோல்வியைக் கூடப் பாமர மனிதர்கள் வரவேற்று மகிழ்ந்து விடுவார்கள். நஷ்டம் தருகிற வெற்றியை வரவேற்க மாட்டார்கள் என்பதை அவன் அறிவான்.

நஷ்டம் தந்து விட்ட, நஷ்டம் தான் தரும் என்று நிரூபித்து விட்ட அந்த அநாவசியமான வெற்றி முத்தக்காளுக்குப் பெரும் அதிருப்தியைத்தான் அளித்திருக்க முடியும். அதில் சந்தேகமில்லை. ஆஸ்பத்திரி வார்டில் முத்தக்காள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.. மண்டையில் கட்டுப் போட்டிருந்தது. இரண்டு முழங்கைகளாலும், தலைக்கு முட்டுக் கொடுத்தபடி கவலையே வடிவமாக இருந்தாள். சித்ராவும், பூமியும் படுக்கை அருகே வந்து நின்றதைக் கண்ட பின்னும் ஓரிரு விநாடிகள் எதுவும் பேசத் தோன்றாமலோ அல்லது வேண்டுமென்றே அவள் முகத்தைக் திருப்பிக் கொண்டாற் போலிருந்தது .