சு. சமுத்திரம்
79
கீழே சம்மணம் போட்டபடி பூக்கட்டிக் கொண்டிருந்த சாந்தியும், ஒரு காலை தூக்கிவைத்து, அதிலே முகம் பதித்து. ஆள் உயர மாலை ஒன்றிற்கு ரோஜாப் பூக்களால் அச்சாரம் போட்டுக் கொண்டிருந்த துலுக்காணமும், தங்கள் புருஷனை அண்ணாந்து பார்த்தார்கள். ஒருத்திக்கு இப்போதுதான் அபார்ஷன் ஆனது. இன்னொருத்திக்கு ஏழு மாதம். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்ட அந்த இரண்டு பொண்டாட்டிக்காரன், "மன்ஷன்னா குடிக்கத்தான் செய்வான்" என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு, எதிரே நின்ற வாடிக்கையாளரைப் பார்த்தான்.
"எத்தனை முயம் சாமி?"
"முழம் எவ்வளவு?"
"சாமந்தி அம்பது பைசா. சம்பங்கி அறுபது பைசா."
"நேத்து முப்பது பைசாதானே."
"இன்னிக்கு சிவராத்திரி சாமி!"
"அதுக்காக இப்படி அநியாய விலையா?"
புரண்டு கொண்டிருந்த புறநானூற்று வீரனான புருஷனை பார்த்தபடியே தாயம்மா இடைமறித்தாள்.
"எங்க பொயப்பு அப்படி சாமி! மழை வந்திட்டா அம்புட்டும் அழுகிடும்... அப்போ எங்க போய் முட்டிக்கிறது...?"
வாடிக்கையாளர் தயங்கிக் கொண்டிருந்தபோது, "இங்கே வா சாமி எங்கிட்டே ரோஜாப்பூக் கீது. தாமரை கீது. உன்னோட சட்டைக்கு இந்த ரோஜா மாட்ச்சாகும்" என்ற குரல் கேட்டது.
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
தாயம்மாவின் பலகைக் கடைக்கு பத்தடி தள்ளி, ஒட்டை மேஜை ஒன்றில் வண்ண வண்ண பூக்களை வைத்தபடி கண்களை வெட்டிக் கொண்டிருந்த காந்தா, ஒய்யாரமாகச் சிரித்தாள். இருபத்திரெண்டு வயதுக்காரி, வெளுத்த செவ்வரளி நிறம். சம்பங்கிப் பூவின் சாயல், சாமந்திப்பூ குவியல் போன்ற அடர்த்தியான தலைமுடி. அவள் பார்வை