பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சாமந்தி-சம்பங்கி-ஓணான் இலை


"இப்டியே விட்டுக்குனு போனால், அவன் எல்லாரையும் படுக்கச் சொல்வான். அவள மட்டும் கவனிக்கப்படாது. அவனையும் சேர்த்துக் கவனிக்கணும்... தட்டுக்கெட்ட மூதேவியாலே நம்ம எல்லாருக்குமே ஆபத்து வந்திருக்கு... நேத்து பார்வதியைக் கூப்பிட்டான். நாளிக்கு துலுக்கானத்தைக் கூப்பிடுவான்... அப்பாலே சாந்தியைக் கேட்டான்... இந்த காந்தா மூதேவி பண்றதனாலே, அவன் எல்லா ஏழைப் பொம்மனாட்டியும் கூப்பிட்டா வந்திருமுன்னு நினைக்கான். இந்த நெனப்பை நாம மாத்திக் காட்டணும். அவன் நெஞ்சிலே கீற மஞ்சாசோத்தை எடுத்து, அவன்கிட்டயே தின்னக் கொடுக்கணும். அப்போதான், என் மனசு ஆறும்..."

பேசிய வாய்கள் மூடிக் கொண்டன - வெடித்த எரிமலை சிறிது விட்டுக் கொடுப்பதுபோல்.

சைக்கிளில் காந்தாவும் போலீஸ்காரரும் வந்து கொண்டிருந்தார்கள். அவன் பின் இருக்கையில் இருந்து இறங்கி, காம்பவுண்ட் சுவரை லாகவமாகத் தாண்டி, மேஜைமீது பூக்களைப் பரப்பியபோது போலீஸ்காரர் அவள் கைகளை செல்லமாக வருடினார். அவள் கன்னத்தின் அருகே அவர் கை போனபோது, காந்தா தன் மோவாயால் அவர் கையைத் தட்டி விட்டாள். "சீ! அக்கம்பக்கத்துலே..." என்று செல்லமாக சிணுங்கினாள். அப்போதுதான் அவருக்கும் மற்றவர்கள் மனிதர்களாகத் தெரிந்தது.

சைக்கிளைவிட்டு இறங்கியபடியே சின்னான் அருகே போனார்.

"ஏண்டா சின்னா... சீக்கிரமா வண்டியை கொண்டு போயேண்டா. டிராஃபிக்கு ஏண்டா இடைஞ்சலா நிறுத்தறே? கயிதே... போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது..."

"எந்தப் போக்குவரத்துக்கு சாமி...?"

"என்னடா, எதிர்க்கேள்வி போடற? பஸ் ஸ்டாண்ட் பக்கமா வண்டி நிக்கப்படாது. வேணுமுன்னா அந்தப் பக்கமா போ... டேய் செருப்பு கண்ணு தெரியாத நேரத்திலே என்னத்தடா தைக்கிற? ஏய் கீரை வழியை அடைக்கிறாபோல ஏன் நெப்புற...?"