பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

109



'யதார்த்தமா பேசுங்கண்ணே... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் முதலமைச்சர்னு முடிவாயிட்டு... அதனாலதான், ஒங்கள ஆளுநரா நியமிச்சிருக்காங்க.. கவலப்படாதிங்கண்ணே... முதலமைச்சரையே பதவி நீக்கம் செய்யிற பதவிண்ணே... முதலமைச்சர் ரஜினிகாந்த்தான் ஒங்கள அனுசரிச்சுப் போகணும்...'

குட்டாம்பட்டியில், தாய்மாமா வீடு, ஊர் முனையிலேயே இருந்தது நல்லதாய்ப் போயிற்று. அந்த ஊர் தெருக்கள், இந்தக் காரைவிட குறுகலானவை. ஊர் முனையில் அதன் அத்தனை ஜனத்தொகையும், திரண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, அக்னிநாத் குழப்பத்தோடு இறங்கினான்... தாய்மாமா முத்துலிங்கம், அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மினார்... வயிறு எக்கிய மனிதர். சதையை சட்டம் போட்டு வைத்திருப்பதுபோன்ற எலும்புக்கூடுகள்... அத்தைக்காரிதான் அவரது விம்மலுக்கு வர்ணனை கொடுத்தாள்.

'எப்பவும் சொல்லுக்குச் சொல்லு 'எங்க அக்கா மகன் முனுசாமி படியேறி வந்து நம்ம கயல்விழியப் பெண் கேப்பான்'னு ஒவ்வொரு நாளும் பேசுற மனுசன்.. நீ இப்படி ஆனதுல இந்த அத்தைக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா முனுசாமி!

அக்னிநாத்திற்குள் பதுங்கியிருந்த முனுசாமி திடுக்கிட்டான். ஆனாலும் இப்போது அசல் முனுசாமியாவே கேட்டான்.'

'நான், கயல்விழியக் கட்டிக்கப்போறது ஒங்களுக்கு எப்படித் தெரியும்? ஒங்களுக்கு நேரில் இந்தச் செய்திய சந்தோஷ அதிர்ச்சியாத் தரணுமுன்னு நினைச்சேன்...'

அவன் கையில், ஒரு நோட்டைத் திணித்தபடியே ஒரு லோக்கல் விடலை விவரம் சொன்னான்.

'பெளர்ணமி தொலைக்காட்சி செய்தியில நீங்க கயல்விழிய கட்டிக்கப்போறதா ஒங்க படத்தோட செய்தி சொன்னாங்க...'