பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்காவது குற்றச்சாட்டு


பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். 'இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே' என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, - முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள்.

'கவலப்படாதீங்க... எல்லாம் நல்லபடியாவே முடியும்... அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்'.

மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக் கோப்புக்குள் பயபக்தியுடன் பாய்ந்தது. 'ரகசியம்' என்று தடித்த எழுத்துக்களால் பொறிக்கப் பட்ட வெள்ளைக் காகித அட்டை ஒட்டிய சிவப்புக் கோப்பு... அந்தச் சித்திரக் குப்தக் குழந்தையை, மார்போடு சாத்தி வலது கையால் அணை கொடுத்திருந்தாள். அந்தக் கோப்புக் குழந்தைக்கு விளையாட்டுப் பொம்மைகளான 'அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள்!' , 'நிறுவனம் - நிர்வாகம்' . 'இடைக்கால பதவி - நீக்கம்' , 'விசாரணை - தண்டணை மறுநியமனம்' ஆகிய தலைப்புகளிட்ட முப்பெரும் புத்தகங்களை இடதுகை பிடித்திருந்தது. அந்தப் புத்தகப் பக்கங்களுக்குள் அம்புவடிவக் காகிதங்கள் புத்தக வால்களாக நீண்டு இருந்தன.

மாணிக்கம், குரல் கணக்கப் பேசினார்.

'எம்மா! நீ... நீங்க என் மகளைவிட சின்ன வயசு, ஆனாலும் எனக்கு நீங்கதாம்மா தாய்.... பெறாமல் பெற்றத் தாய்'.