பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

149


மார்த்தாண்டம், புறமுதுகு காட்டி நடந்து கொண்டிருந்தார். சொல்லி வைத்தது போல், இரண்டுபேர் எதிர்பட்டார்கள். முதியவர் நண்பர். இளையவன் தெரிந்தவன். அவர்கள் காதுகளில் இவர் கிசுகிசுத்தார். மூவருமாய் போய், அவனை அதட்டி அந்தப் பெண்ணை மீட்க வேண்டும் என்று அபிநயமாய் கையாட முகமாட கேட்டுக் கொண்டார். அவர் கிசுகிசுப்பை ரசித்துக் கேட்ட அவர்களோ சிரித்தார்கள். பின்னர் இந்தக் காட்சியை, தாங்கள் இதேதெருவில் மார்னிங், மேட்னி, நைட்டாக பலதடவை பார்த்ததாய் பதிலுக்குக் கிசுகிசுத்தார்கள். முதியவர், தன் மோவாயைத் தாங்கிய மார்த்தாண்டத்தின் கைகளை விலக்கியபடியே, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினார்.

"நீங்க சொல்றதுபோலவே... அந்தப் பயல விரட்டிட்டு, அந்தப் பெண்ணை மீட்டி, அவள் வீட்டுல ஒப்படைக்கிறதா வச்சுக்குவோம். அப்புறமும், இந்தப் பொண்ணு இவனோட சரசமாட மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? ருசிகண்ட பூணை பாருங்க... சரி... அப்படியே இவளை, அவன்கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிச்சுட்டோமுன்னு வச்சுக்குவோம். இந்தப் பயல், அவள் கிடைக்காத வெறுப்புல, நம்மையும் நடுரோட்டுல வெட்ட மாட்டான் என்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? ஜாமின் கிடைக்கிற தைரியத்துல நம்ம வீட்டுப் பெண்களையும் மானபங்கப் படுத்தமாட்டான் என்பதற்கு என்ன கியாரண்டி? அதனால, பேசாம வீட்டுப் போங்க இது கலிமுத்துன டெலிவிஷன் காலம் பெத்தவங்க சரியா வளர்க்காட்டால், மத்தவங்க என்ன செய்ய முடியும்?"

மார்த்தாண்டம், சமவயது நண்பரை விட்டு விட்டு, அந்த இளைஞனைப் பார்த்தார். ஒரு கம்பெனியில் காரோடும் சீரோடும் வேலைபார்ப்பவன். அவனும் தன்பங்குக்கு விவகாரத்தில் சிறிது மண்ணள்ளிப் போட்டுப் பேசினான்.

"அந்தப் பொண்ணு சம்மதிச்சுத்தானே வந்திருக்காள்... உங்களுக்கு என்ன அங்கிள்? அனுபவிக்க வேண்டிய வயது அனுபவிக்கட்டுமே. லெட் தெம் என்ஜாய்... டோன்ட் பீ எ கில் ஜாய்."

மார்த்தாண்டம் அழாக்குறையாய் முறையிட்டார்.