பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

45


கர்ப்பிணி மனைவிக்காக உள்ள பணம். ஏற்கனவே, அவளுக்கு சிசேரியன் ஆப்பரேஷன். டாக்டர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். மீதிப்பணம், வேறு திரட்ட வேண்டும். ஆனாலும் பால்வண்ணன் அடுத்த திங்கட்கிழமை வந்து அவ்வளவு பணத்தையும் கொடுக்கிறதா உறுதியளித்திருக்கார். மார்த்தட்டி சொல்லி விட்டு, முதுகை காட்டுவது தப்பிலும் தப்பு... பெரிய தப்பு.

வேதமுத்து, வீட்டுக்கு போனதும், மனைவியை குசலம் விசாரித்தான். இனிமேல் மத்தியானத்திற்கும் அவள் கைப்பட சமைக்கும் சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துப் போவதாக வாக்களித்தான். அடுத்தாண்டு 'எல்.டி.சி.' எனப்படும் அரசாங்க பணத்துடன், அவளையும் பிறந்த பேய்களையும், பிறக்கப்போகும் தேவதையையும் கூட்டிக்கொண்டு, பத்ரிநாத், கேதார்நாத், தாஜ்மஹால் போன்ற இடங்களை காட்டப்போவதாக வாக்களித்தான்.

வேதமுத்துவின் மனைவிக்கு ஒரே கொண்டாட்டம். மகிழ்ச்சியை மனதிற்குள் வைக்காமல் அதை அவன் கழுத்தில் கைபோட்டுக் காட்டினாள். அவன் அந்த கைகளை நீவிவிட்டான். அவற்றில் கிடந்த இரண்டு தங்க வளையல்களையும் உருட்டி விட்டான். பிறகு தர்மம் தலைகாக்கும் என்பதற்கு ஒரு கதையைச் சொன்னான். அப்புறம் விவரம் சொன்னான். அவன் எதிர்பார்த்தது போல், அவள் குமுறவில்லை. கொந்தளிக்கவில்லை. சிறிது யோசிக்கத்தான் செய்தாள். பிறகு வளையல்களை அவனிடம் கழற்றி கொடுத்தாள். இவன், வெள்ளிக்கிழமை ஆயிற்றே என்று இழுத்தபோது, அவளோ நாளும் கிழமையும் பால்வண்ணணுக்கு கிடையாது என்றாள். அப்போதே, அடகு வைத்து, அந்த வேகத்திலேயே பணத்தைக் கட்டச் சொன்னாள். அதோடு அவனுக்குத் தோன்றாத ஒன்றையும் சொன்னாள். பழைய ஆபீஸர் டெலிபோனில் (பக்கத்து வீட்டு டெலிபோன்) வருவது வரைக்கும் காத்திருக்க வேண்டாமாம். இன்றைக்கே பணம் கட்டிய விவரத்தைச் சொல்லி, அதற்காக ரசீதையும் கூரியரோ, கேரியரோ அதுல வச்சு அனுப்பிடனுமாம். இவனாவது பழைய ஆபீஸருக்கு விசுவாசமாய் இருக்கனுமாம்.