பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

65


ஆட்களைக்கூட, என்னங்க போட்டு பேசுகிறவர்... அதே சமயம் குவாரிகளுக்கு, திருட்டுத்தனமாய் போகும் லாரிகளை மடக்கிப் பிடிப்பவர்... அரிசி கடத்தலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். உழைப்புக் ஒரு உருவம் காட்ட வேண்டுமென்றால் அவர்தான்.

கதிர்வேலு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்... எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு மேலான பதவி இல்லை.

கதிர்வேலு, அவசர அவசரமாய் எழுந்து, சமையல் கூடத்திலுள்ள அலமாரியில் உள்ள ரிஜிஸ்தரை எடுத்துக் கொண்டு, அவர் தங்கிய அறையைத் தட்டினான். உள்ளே கேட்ட அதட்டல் குரல் ஏற ஏற இவனது தட்டலும் ஏறியது. இறுதியில் அவர் லுங்கியோடு, வெளிப்பட்டார். அவள் குப்புறக் கிடந்தாள்.

'என்ன கதிர்வேலு... என்ன விசயம்... எதுக்காக இப்படி லூட்டி அடிக்க...'

அப்படியெல்லாம் ஒண்னும் இல்லைங்கய்யா. இந்த ரிஜிஸ்தர்ல அய்யாவோட பேரு அம்மாவோட பேரு வந்ததுக்கான காரணம் எழுதி ஒரு கையெழுத்து போடுங்க...'

"போடாட்டா..?"

'இடத்தக்காலி பண்ணுங்க...'

'பண்ணாட்டா...'

'என் உடம்புல பலம் இருக்குது.'

அவள் உடல் சுருட்டி எழுந்தாள். ஒட்டடைக் கம்பன் உதறல் எடுத்து நின்றான். கதிர்வேலு அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

'இது அரசாங்கத்தோட கெளரவமான மாளிகை. பிராத்தல் ஹவுஸ் இல்ல... ஒண்னு கையெழுத்து போடுங்க... இல்லாட்டா நடையைக் கட்டுங்க..'

கதிர்வேல், ரிஜிஸ்தரை நீட்டியபடியே அவரை நெருங்கிக் கொண்டிருந்தான்...

தினகரன், பொங்கல் மலர் - ஜனவரி 1998