8
2. வாழ்க்கை வரலாறு
தன்னுடைய அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதன் காரணமாகத் தன் காலத்திலேயில்லாவிட்டாலும், பிற்காலத்திலே அரசியல் உலகிலே ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய மாக்கியவெல்லி இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவன். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று பிளாரன்ஸ் நகரிலே மாக்கியவெல்லி பிறந்தான். அவன் பிறந்தபோது பிளாரன்ஸ், குடியாட்சி நடைபெற்று வந்த ஒரு நகர ராஜ்யமாக விளங்கியது மாக்கியவெல்லியின் முழுப்பெயர் நிக்கோலோ மாக்கியவெல்லி என்பதாகும். அவன் தந்தையின் பெயர் பெர்னார்டோ மாக்கியவெல்லி.
நிக்கோலோ மாக்கியவெல்லி தன் இளமைப் பருவத்தை எப்படிக் கழித்தான் என்பது தெரியவில்லை. எங்கு படித்தான், எப்படிப்பட்ட கல்வி பெற்றான் என்ற விவரமெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவனுடைய சிந்தனைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவை, அவன் இளமைப் பருவத்திலே நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் தாம் என்று சொல்லலாம். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சாதாரணமானவையல்ல.
அவற்றில் முதலாவது நிகழ்ச்சி எட்டாவது சார்லசின் தலைமையில் நடந்த பிரெஞ்சுப் படையெடுப்பாகும். ஒரு மிகச் சிறிய படையுடன் நடத்தப்பட்ட படையெடுப்புத்தான் என்றாலும் அது, இத்தாலிய ஆதிக்க முறைகளை, அட்டை வீடுகளைத் தட்டிக் குலைப்பது போல் தட்டுத் தடுமாறிக் குலைந்து போகும்படி செய்து விட்டது. இந்த நிகழ்ச்சி அந்த இளம் அரசியல்வாதியை அதிகார சக்தியின் அடிப்புறத்தை உற்று நோக்கும்படி செய்தது.
மற்றொரு நிகழ்ச்சி சாவனரோலாவின் உயர்ச்சியும் வீழ்ச்சியுமாகும். சாவனரோலா மதச் சீர்திருத்தம் ஒன்றைச் செய்ததன் காரணமாகப் பெருஞ் செல்வாக்கடைந்தார். எட்டாவது சார்லசின் ஆட்சிக்குட்பட்ட நகரத்தை எவ்வித தீங்கும் அடையாமல் காப்பாற்றினார். தமது பரிசுத்த பக்திக் கொள்கையை மிகத் தீவிரமாக அமுல் நடத்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய அதிகாரத்தின் கீழ் இயங்கிய அந்த நகர ராஜ்யத்தில்