பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


தாமதமான காலந் தாழ்ந்த யோசனைகளால் எதுவும் பயனில்லை. அது தீமை பயக்கக் கூடியது. பல வீ ன முள்ளவர்களோ, படைபலமற்றவர்களோ, தைரியமற்றவர்களோ தாம் தாமதங் காட்டுவார்கள். நல்ல குடிமக்கள் எந்த விஷயத்திலும் விரைவான ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

-திருக்குறள்

அடுத்துக் கெடுப்பதால் ஆட்சியைக் கைப்பற்றலாம் :

ரோமானியக் குடியரசில் மக்களுக்கும் பிரபுக்களுக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தையொட்டி, ரோமாபுரியின் மீது படையெடுத்தால் எளிதாக ரோமாபுரி ராஜ்யத்தை அடியோடு அழித்து விடலாமென்று லெயண்டியர்கள் துஸ்காளியரின் பக்க பலத்தோடு படையெடுத்துச் சென்றார்கள். ஆனால், லெயண்டியர்கள் படையெடுத்து வந்ததைக் கண்ட ரோமானியர்கள், தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்று சேர்ந்து பகைவர்களைத் தாக்கித் தோற்கடித்துத் துரத்திவிட்டார்கள்.

எந்த வழியைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று தெரியாமல் மனிதர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

ரோமாபுரி பிளவு பட்டிருக்கும் சமயத்தில் லெயண்டியர்கள் படையெடுத்துச் சென்றால் வென்றுவிடலாம் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்கள் இந்தச் சமயத்தில் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டியதேயில்லை. அவர்கள் சமாதான முறையிலேயே பிரிந்து போயிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நடு நின்று தீர்ப்புச் சொல்லுபவர்களைப் போல் உள்ளே நுழைந்திருக்கலாம். அல்லது படையெடுத்துச் சென்றே பல்வீனமுள்ள கட்சியாருக்காகப் போராடுவதாகப் பாவனை செய்து ஒரு கட்சியையொழித்து, மற்றொரு கட்சியைத் தங்கள் அடிமைகளாக்கி இருக்கலாம். அந்த நாட்டையும் தங்கள் ஆட்சிக்குட்படுத்தியிருக்கலாம்.