பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


ரோடரிக் பிரபு தம் திருமணத்தை மிகச் சிறப்பாகவும். அலங்காரமாகவும் நடத்தினார். அப்படிப்பட்ட ஆடம்பரமான திருமண விழாவிற்குத் தேவையான எதுவும் கைவிடப்படவில்லை! நரகலோகத்தாரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு மனித ஆசைகளுக்கு ஆட்பட்டவராக இருந்தார் ரோடரிக் பிரபு. அதனால் மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் பெருமையான சடங்குகளையெல்லாம் உடனடியாகச் செய்யத் தொடங்கினார். இதற்கெல்லாம் செலவழித்த பணம் கொஞ்ச நஞ்சமல்ல! அதுவும் தவிர, தம் அருமை மனைவி யோக்கியவதியுடன் (ஹானெஸ்டாவுடன்) மண வாழ்க்கை நடத்தத் தொடங்கிச் சில நாட்கள் ஆவதற்கு முன்னாலேயே அவர் அவள்மீது மாபெருங் காதல் கொண்டுவிட்டார். அவள் எப்போதாவது துன்பமாகவோ கவலையுடனோ இருப்பதைக் கண்டால் அவருக்கு உள்ளம் பொறுக்காது.

குலப் பெருமையோடும் அழகோடும் சீமாட்டி ஹானெஸ்டா, லூசியருக்குக் கூட இல்லாத அகங்காரத்துடனும் ரோடரிக் பிரபுவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். அவர்கள் இரண்டு பேருடைய அகங்காரத்தையும் நேரில் கண்ட ரோடரிக் தன் மனைவியின் இறுமாப்புத்தான் உயர்ந்தது என்று சொன்னார். தன் கணவருக்குத் தன்மேல் இருந்த காதலைக் கண்டறிந்த பிறகு, அவளுடைய கர்வம் மேலும் பெரிதாகியது. எல்லா விஷயத்திலும் தன் விருப்பப்படி கணவரை ஆட்டி வைக்கலாம் என்று கண்ட பிறகு அவள் இரக்கமில்லாமலும், மரியாதையில்லாமலும் அவரைப் பல வகையிலும் ஏவத்தொடங்கிவிட்டாள். அவர் ஏதாவது மறுத்துரைத்தால் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவள் சீறிக் கடிந்துரைக்கச் சிறிதும் தயங்கவில்லை. இதெல்லாம் ரோடரிக் பிரபுவிற்கு அளவற்ற வேதனையையளித்தது. இருந்தும் அவருடைய மாமனாரும் அவளுடைய சகோதரர்களும், உறவினரும், திருமண ஒப்பந்தமும் அவரைப் பொறுமை கொள்ளச் செய்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அவளிடம் கொண்டிருந்த காதல் அவரைப் பெரும் பொறுமைக்காரராகச் செய்தது.

மனைவி புதிது புதிதாக, நவநாகரிகமான உடைகளை அணிவதற்காக அவர் ஏராளமான பொருள் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவளுடன் சச்சரவில்லாமல்