பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

முடியாதவர்களாயிருப்பார்கள். ஏனென்றால் தங்களிடம் நட்பும் விசுவாசமும் உடைய படைகள் அவர்களிடம் இருப்பதில்லை.

ஆரம்பத்தில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்த எதுவும் ஆழத்திற்கு வேரூன்றிவிட முடியாதாகையால், முதற் புயல் அடிக்கும் போதே வீழ்ந்து விடுவதுபோல, எளிதாக அடைந்த இராஜ்யங்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆட்டங் கண்டுவிடக் கூடும். ஆனால், அப்படித் திடீரென்று அரசனாகக் கூடியவன் பெருந் திறமையுடையவனாக இருந்தால், அவன் தனக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த அந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்விதமான தீமை நேர்ந்தாலும் அவ்வவ்வற்றிற்குத் தக்கபடி அவசரமான காரியங்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து ஒழித்துவிட்டுப் பிறகு தன் அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டு விட முடியும்.

அதிர்ஷ்டவசத்தாலோ பிறர் உதவியாலோ அரசரானவர்கள் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பகைவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நண்பர்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். படைபலத்தாலும் சூழ்ச்சித் திறத்தாலும் ஆட்சி நடத்த வேண்டும். குடிமக்கள் தன்னை நேசிக்கவும் தனக்குப் பயந்து நடக்கவும் செய்ய வேண்டும். இராணுவ வீரர்கள் தன் சொற்படி நடக்கவும், தன்னிடம் பயபக்தி காட்டவும் செய்யவேண்டும். தனக்குத் தீமை செய்யக் கூடியவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். பழைய பழக்க வழக்கங்களிடையே புதுமையைப் புகுத்த வேண்டும். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் கண்டிப்பாகவும், அன்பாகவும், மகத்துவமுடையவனாகவும் உதார குணமுடையவனாகவும் இருக்க வேண்டும். பழைய ராணுவத்தை ஒடுக்கிப் புதிய இராணுவத்தை உண்டாக்க வேண்டும். அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களும் மன்னர்களும் தனக்கு உதவி செய்ய மகிழ்ச்சியோடு முன் வரும்படியும் ஊறு செய்ய அஞ்சும்படியும் ஆன நிலையில் அவர்களுடன் நட்புறவு கொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் கவனம் செலுத்தக் கூடிய அந்தப் புதிய அரசன் தன் அரசபீடத்தை நிச்சயமாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.