பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

நான் சற்று முன் சொன்னபடி தான் அவனைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் அரசர் கூடுமானவரையிலும் பிறர் விருப்பப்படி நடக்கும் நிலைமைக்கு ஆட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

எந்த ராஜ்யமும் தான் எப்போதும் பாதுகாப்பான கொள்கையைப் பின்பற்றலாம் என்றோ, அல்லது எப்போதும் ஐயத்திற்கிடமான நிலையில் இருக்கவேண்டுமென்றோ எண்ணக்கூடாது. இது அந்தந்த நிகழ்ச்சிகளைப் பொறுத்தது. ஒருவன் ஒரு கஷ்டத்தைத் தீர்க்க வேண்டுமென்றால், இன்னொரு கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளும்படியும் நேரிடலாம். ஆனால் அந்தக் கஷ்டங்களின் தன்மையை அறிந்து துன்பம் குறைவாயுள்ளதை நல்லதாக எண்ணிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கீர்த்தியடைய விரும்புகின்ற அரசன் தகுதி உடையவர்களை விரும்புபவனாக்கி காட்டிக் கொள்ள வேண்டும். திறமையுடையவர்களுக்கும் ஒவ்வொரு கலையிலும் மேம்பாடடைந்தவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும். தன் குடிமக்கள் தங்கள் உழவு. வாணிகம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் நன்றாக ஈடுபடும்படி. உற்சாகமளிக்க வேண்டும். ராஜ்யத்திற்கு நலமளிக்கக் கூடிய காரியங்களைச் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் இடையிடையே திருவிழாக்கள் நடத்தி அந்த விழாக்களில் மக்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் :

ஓர் அரசன் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியத்துவமில்லாத காரியமல்ல. அவர்கள், அரசனின் புத்திசாலித்தனத்திற்கேற்ப நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களைப் பார்த்தே அரசனுடைய குணத்தையும் புத்திசாலித்தனத்தையும் எடைபோட்டுக் கொள்ளலாம்.

உலகத்தில் மூன்று விதமான மூளைகள்
இருக்கின்றன. ஒன்று தானாக விஷ்யங்களை
யூகித்தறிந்து கொள்கிறது. இது நல்ல மூளை.
இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய
பிறகு தெரிந்து கொள்கிறது. இதுவும் நல்ல
மூளைதான்.