பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இத்தாலி பரதேசிகளிடமிருந்து விடுதலை பெற யோசனை:

அரசே. இதுவரை இருந்த இத்தாலியர்கள் யாரும், தாங்கள் செய்யக்கூடும் என்று நம்புகிற அளவு பெருங்காரியத்தைச் செய்ததில்லை. இதுவரை நடந்த கலகங்களிலும், போர் நடவடிக்கைகளிலும் இத்தாலியின் இராணுவத் திறமை அடியோடு ஒழிந்து போனது போன்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம், பழைய முறைகள் நல்லவையல்ல என்பதே. புதிய முறைகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்று அறிந்தவர்கள் இதுவரை தோன்றியதில்லை. புதிதாகத் தோன்றிய ஒருவர் புதிய நீதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதைப் போல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

இந்த நாட்டினரிடத்திலே பெரும் பண்புகள் இருக்கின்றன. ஆனால், தலைமை ஏற்று நடத்தியவர்களின் தலையிலேதான் எதுவும் இருந்ததில்லை. போட்டிகளிலும் தனி மனிதர்கள் நேருக்கு நேர் நின்று போராடும் நிகழ்ச்சிகளிலும் இத்தாலியர்கள் எவ்வளவு பலமும், புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் காட்டுகிறார்கள். ஆனால், படையென்று வரும்பொழுது அவர்கள் எவ்வளவு மோசமாகத் தோன்றுகிறார்கள். இதற்குக் காரணம் தலைவர்களிடம் உள்ள பலவீனம்தான். தாங்கள் சரியாகக் கீழ்ப்படியப்படவில்லை என்று அறிந்தும் அந்த நிலைக்கு அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முயன்றதில்லை. இதனால்தான் கடந்த இருபதாண்டுகளில் எந்தச் சண்டையிலும் இத்தாலியப் படைகள் தோல்வியையே தழுவி வந்திருக்கின்றன.

ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம், தங்கள் நாடுகளை ஈடேற்றிய அந்தப் பெரிய மனிதர்களின் வழியைப் பின்பற்ற விரும்பினால், முதற்காரியமாக தங்களுக்கென்று சொந்தமான ஒரு படையமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தச் சொந்தப் படைவீரர்களைக் காட்டிலும் உண்மையும் சிறப்பும் பொருந்திய வீரர்களை வேறு எங்கும் காணமுடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மிக நல்லவர்களாயிருந்தாலும் கூடத் தங்கள் அரசன் தலைமையில் இயங்கும்போது, அவனால் சிறப்பாகவும் ஆதரவாகவும் நடத்தப்படும்போது ஒற்றுமையாகவும் நன்றாகவும் இயங்குவார்கள்.