பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அந்தக் காலத்து மருத்துவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததே இன்றைய மருத்துவ விஞ்ஞானம். அதுபோலவே, இன்றைய சட்டங்களெல்லாம் அந்த முன்னோர்களுடைய நியாய ஆலோசகர்களின் முடிவுகளைக் கொண்டு இன்றைய புதிய நியாய சாஸ்திரிகள் வகுத்தவை தாம்! இருப்பினும் ஒரு குடியரசை நிறுவவோ, அரசுகளை நிலைபெறச் செய்யவோ, சாம்ராஜ்யத்தையாளவோ, படை நடத்தவோ, போர்புரியவோ, சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தவோ, நீதியை நிலைநாட்டவோ, எந்த மன்னனும் அல்லது குடியரசுவாதியும் அல்லது படைத்தலைவனும், அல்லது குடிமகனும் முன்னையுதாரணங்களைப் பின்பற்றுவதில்லை. உலகத்தைச் சுருங்கச் செய்துவிட்ட நமது கல்வியின் தீமைகளினால் உண்டாகிய பலவீனம் காரணமாக இந்தப் புறக்கணிப்பு ஏற்பட்டது என்பதைக் காட்டிலும், அகங்காரமான சோம்பேறித்தனத்தின் தீயபயன்களினாலும், உண்மையான சரித்திர அறிவு இன்மையாலும், அதைப் பெற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாமையாலும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

மனித இனத்தை இந்தப் பிழைபாட்டிலிருந்து விடுவிப்பதற்காக, முற்காலத்து நடந்தவற்றையும் தற்காலத்து நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சரியான தெளிவு பெறத் தேவையான விஷயங்களையெல்லாம் எழுதுவது நல்லதென்று எண்ணினேன்.

மற்றவர்களைப் போல நான் ஆர்ப்பாட்டமான வசனங்களையும், அலங்காரமான வார்த்தைகளையும் போட்டு எழுதவில்லை. விஷயத்தின் முக்கியத்துவத்துக்கும் கருத்தின் உண்மைக்குமே என் நூலில் இடமிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.

மலையின் மேல் இருப்பவனால்தான் கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்தை முழுதும் காண முடியும் கீழேயிருப்பவனால்தான் மலையின் உயரத்தையும் பெருமையையும் அளவிட முடியும். அதுபோல மக்களின் இயல்பை நன்றாயறிய ஒருவன் மன்னனாயிருக்க வேண்டும் மன்னனின் இயல்பை நன்கு புரிந்து கொள்ள விரும்புபவன் மக்களில் ஒருவனாயிருக்க வேண்டும். ஆகவே மன்னர்களின் நடத்தையைப் பற்றி ஆராயவும், வழிகாட்டவும், எளியவனும் தாழ்ந்தவனுமாகிய நான் முற்படுவது தன் மூப்பான காரியம் என்று கருதப்படாதென நம்புகிறேன்.