பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டது. பொது நிர்வாகத்தில் மக்களுக்குப் பங்கேற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ரோமானியர்கள் விடுதலைக்கு உறுதியான பாதுகாப்பளிப்பதாகவும் ஆகியது.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைட யாரிடம் ஒப்படைப்பது?:

குடியரசுக்கு விவேகமான அரசியலமைப்புக்களை யளித்த சட்டஞ் செய்பவர்கள் எல்லோரும், விடுதலையைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடியரகம் பொதுமக்களும் பிரபுக்களும் அடங்கியதாக இருப்பதால், இவர்களில் யார் வசம் விடுதலையைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தருவது என்ற கேள்வி எழுகிறது.

பிரபுக்கள் மற்றவர்களை அடக்கியாள வேண்டுமென்ற பேராசையுள்ளவர்கள். பொதுமக்களோ, தாங்கள் அடக்கப் படக்கூடாதென்ற விருப்பம் மட்டுமேயுள்ளவர்கள்; விடுதலையுரிமையைச் சுதந்திரமாக அனுபவித்து வாழவேண்டுமென்ற ஆசையுள்ளவர்கள். ஆகவே விடுதலையுரிமையைப் பாதுகாக்கும். பொறுப்பை அவர்கள் கையில் விட்டால், மற்றவர்கள் உரிமையில் தலையிட வேண்டுமென்ற எண்ணம் கொள்ளாமல், அதை இயல்பாகவே கவனமாகப் பாதுகாத்து வருவார்கள். தாங்களே முழுதும் அந்த உரிமையை வசப்படுத்திக்கொள்ள இயலாத அவர்கள் மற்றவர்கள் அவ்வாறு செய்யாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரபுக்கள் வசம் ஒப்படைத்தால் இருவிதமான நன்மைகள் உண்டென்று சொல்லப்படுகிறது. முதலாவது, அந்தப் பிரபுக்களுடைய அதிகார ஆசையை இதனால் தணிக்க முடியும். இரண்டாவதாக, பொதுமக்கள் கையில் அதிகாரம் இருப்பதால், தொல்லைகளையும் குழப்பங்களையும் உண்டாக்கக் கூடிய இடைவிடாத உணர்ச்சி அவர்களிடம் இல்லாதபடி செய்யப் பிரபுக்களால் முடியும்!