பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

79



679. “உயிர் வாழ்வில் உள்ள ஆசையே நோய்களை வளர்க்கிறது; பாதுகாக்கிறது.”

680. “காரியம் ஒன்றுபோலத் தோன்றும். ஆனால், அதன் காரணங்கள் ஒன்றல்ல; பலவேயாம்.”

681. “அழுக்காறு நுண்மை வடிவத்தில் இருந்தாலும் ஆற்றலைக் கெடுக்கும்.”

682. “மூளைச் சோம்பல் செயல்திறனைக் கெடுக்கும்.”

683. “காலத்தின் விளைவுகளையெல்லாம் அளந்து எண்ணி அனுபவிப்பவர்கள் காலத்தை அளந்து பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள்.”

684. “வளர்ச்சியில்லாத அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இன்று ஒழுக்கக் கேட்டை-முறைகேடான அதிகாரப் பிரயோகத்தை தேசீய மயப்படுத்தி விட்டார்கள்.”

685. “இன்றைய அரசியல் கட்சிகள்-தேர்தல் இயக்கங்களே! அரசியல் இயக்கங்கள் அல்ல!”

686. “இன்றைய சமுதாய அமைப்பில் உடல் வலிமைமே ஆதிக்கம் செய்கிறது. அறிவறிந்த ஆளுமையல்ல.”

687. “ஒரு நொடிப் பொழுது வாழ்க்கை நின்றாலும் பல நாள்களின் முன்னேற்றம் தடைப்படும்.”

688. “விரைவு மிக்க இயந்திர கதியில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியர்கள் ஆமை வேகத்தை மாற்றிக் கொண்டார்களில்லை.”

689. “அரசாங்கம் வேலைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமல்ல. மனிதர்களேதான் வேலைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.”